PUBLISHED ON : அக் 29, 2020

துாங்குவதற்கு முன் தண்ணீர் குடித்து விட்டு துாங்கினால், செரிமானம் நன்றாக இருக்கும். இதயக் கோளாறுகள், குறிப்பாக, மாரடைப்பு வராது என்று சொல்வதற்கு, மருத்துவ ரீதியாக எந்த ஆதாரமும் இல்லை. ஆரோக்கியமாக இருக்கும் ஒருவருக்கு, 4 லிட்டர் திரவ உணவு தினசரி தேவை; இதில், தண்ணீர், டீ, காபி, பழச்சாறு, கஞ்சி என்று எல்லாம் அடங்கும்.
சர்க்கரை கோளாறு, இதயக் கோளாறு, வேறு ஏதேனும் நாள்பட்ட உடல் பிரச்னை இருப்பவர்கள், அவரவர் ஆலோசனை பெறும் டாக்டரின் அறிவுரைக்கு ஏற்ப, திரவ ஆகாரம் குடிக்க வேண்டும். காரணம், தனிநபரின் தேவை, மருந்துகளின் தன்மைக்கு ஏற்ப தான், இதை பரிந்துரைக்க முடியும்.
எந்த உடல் பிரச்னையும் இல்லாமல் இருந்தால், உடற்பயிற்சி செய்யும் போது, வெளியில் செல்லும் போது, வெப்பம் அதிகம் இருக்கும் நேரங்களில் அவ்வப்போது தண்ணீர் குடிக்க வேண்டும். சர்க்கரை கோளாறு இருப்பவர்களுக்கு, இரவு நேரத்தில் அடிக்கடி எழுந்து சிறுநீர் கழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தால், அவரின் ரத்த சர்க்கரையின் அளவு, கட்டுக்குள் இல்லை என்று புரிந்து கொள்ள வேண்டும். ரத்த சர்க்கரையின் அளவை ஒரே சீராக கட்டுக்குள் வைத்திருந்தால், ஆறு - ஏழு மணி நேர துாக்கம், எந்த தொந்தரவும் இல்லாமல் இருக்கும்.
அதேபோல, எந்த உடல் கோளாறாக இருந்தாலும், டாக்டரின் ஆலோசனையை முறையாக பின்பற்றி, பிரச்னையை கட்டுக்குள் வைத்திருந்தால், துாங்கும் நேரத்தில் பிரச்னை இருக்காது. தினமும், இரவில் ஏழு மணி நேரம் துாங்க முடியவில்லை எனில், என்ன காரணம் என்பதை கண்டறிந்து, அதை சரிசெய்ய வேண்டும்.
டாக்டர் ஆர்.எம்.அஞ்சனா
சர்க்கரை கோளாறு மருத்துவஆலோசகர்,
சென்னை.
044 - 4396 8888
