PUBLISHED ON : நவ 01, 2020

பெண்களுக்கு ஏற்படும் தொற்றுகளில் மிகவும் பிரதானமானது சிறுநீரக தொற்று. காரணம், பெண்களின் உடலமைப்பு இயற்கையிலேயே எளிதில் சிறுநீரக தொற்று பரவும் விதத்தில் அமைந்துள்ளது. ஆண்களை ஒப்பிடும்போது, பெண்களின் சிறுநீரக குழாய் மிகவும் சிறியது. சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டவுடன், சிறுநீர் கழித்து விட வேண்டும். இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை சிறுநீர் கழிப்பது ஆரோக்கியம்.
சர்க்கரை நோயாளிகள், கர்ப்பிணி கள், சிறுநீரக கோளாறு உள்ளவர்கள், அவரவரின் உடல் நிலையைப் பொறுத்து இது மாறுபடலாம்.
சிறுநீரகங்கள், சிறுநீர்க் குழாய் அருகிலேயே கர்ப்பப்பை, கருக்குழாய் போன்றவை அமைந்துள்ளன. பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற தொற்றுகள் தொடர்ந்து சிறுநீரகங்களில் ஏற்பட்டு, சிகிச்சை செய்யாத பட்சத்தில், கீழிலிருந்து மேல் பகுதியில் உள்ள கர்ப்பப்பை, கருக்குழாய் போன்ற இனப்பெருக்க உறுப்புகளை பாதிக்கும்.
இதனால், குழந்தையின்மை, கருப்பையில் கரு உருவாகாமல், கருக்குழாயில் உருவாவது போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படலாம். அதேபோன்ற, மாதவிடாய் ஏற்படும் போது, சுகாதாரமற்ற முறையில் இருந்தால், அதுவும் சிறுநீரகங்களை பாதித்து, தொற்று ஏற்பட வழிவகுக்கும்.
சிறுநீரக தொற்றின் அறிகுறி
நீண்ட நாட்களாக இடுப்புப் பகுதியில் வலி, முதுகில் வலி, அடி வயிற்றில் வலி இருப்பது சிறுநீரக தொற்றின் அறிகுறியாக இருக்கலாம். தொற்று உறுதியானால், அதற்கான முறையான சிகிச்சை செய்யாமல் விட்டால், பிரச்னை பெரிதாகி, நாள்பட்ட நோயாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இதற்கு அடுத்து பொதுவாக பாதிக்கும் தொற்று வெள்ளைபடுதல். சிலருக்கு தயிர் போன்று திரி திரியாக வெள்ளைபடும். இது பூஞ்சை தொற்று. ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாறுதலால் வருவது. எனவே, 13 வயதிற்கு முன் அல்லது மாதவிடாய் நின்ற பின் இந்த தொற்று ஏற்படாது.
கர்ப்ப காலத்தில், சர்க்கரை கோளாறு இருந்தால், 'இம்யூனோ சப்ரசன்ட்' மாத்திரைகள் சாப்பிடுவது, குழந்தையின்மை சிகிச்சை பெறுபவர்களுக்கு இவ்வகை தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம். வீக்கம், அரிப்பு, தோல் சிவந்து தடித்து போவது போன்றவை இதன் அறிகுறிகள்.
சிகிச்சை அளித்தாலும் சிலருக்கு திரும்ப திரும்ப இந்தத் தொற்று வரும். அப்படி இருப்பவர்கள், பருத்தி துணி உள்ளாடைகள் அணிவது, இறுக்கமாக உள்ளாடை அணியாமல் இருப்பது, எட்டு மணி நேரத்திற்கு ஒரு முறை உள்ளாடைகளை மாற்றுவது, இதற்கென்று உள்ள லோஷன்களை டாக்டரின் ஆலோசனைப்படி பின்பற்றுவது போன்ற சில வாழ்க்கை முறை மாற்றங்களை பின்பற்ற வேண்டும்.
பெண்களின் பிறப்புறுப்பில் இயல்பாகவே நல்ல பாக்டீரியாக்கள் இருக்கும். பல காரணங்களால், இவற்றைவிட தீமை செய்யும் பாக்டீரியாக்கள் அதிகமாகும் போது, துர்நாற்றத்துடன் வெள்ளை படுதல் ஏற்படும். இது இனப்பெருக்க வயதான, 20 - 40 வயதில் ஏற்படும்.
இதிலும், இடுப்பு வலி அதிகம் இருக்கும். கர்ப்பிணிக்கு இது போன்ற தொற்று ஏற்பட்டால், குறை பிரசவம் ஏற்படுவது, குழந்தை பிறந்த பின் கர்ப்பப்பையில் தொற்று, கருச் சிதைவு போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
அடுத்த பொதுவான தொற்று, ஹியூமன் பேப்பிலோனா வைரஸ் - ஹெச்.பி.வி., தொற்று. இந்தத் தொற்று ஏற்பட்டால், கர்ப்பப்பை வாயில் கேன்சராக மாறும் அபாயம் அதிகம். இதில், 100 வகையான வைரஸ்கள் உள்ளன. இவற்றில், 40 வகையான வைரஸ்கள் பெண்களை பாதிக்கின்றன. இதிலும், அதிக பாதிப்பை ஏற்படுத்துபவை, குறைந்த பாதிப்பை உண்டாக்குபவை என்று இரு வகைகள் உள்ளன.
அதிக பாதிப்பை ஏற்படுத்துபவை தான், கர்ப்பப்பை வாய் கேன்சரை ஏற்படுத்தும்.
மார்பக கேன்சர் உட்பட மற்ற கேன்சர்கள், மரபியல் அல்லது ஹார்மோன் மாறுபாட்டால் வரலாம். ஆனால், இது வைரஸ் தொற்றால் ஏற்படக் கூடிய கேன்சர். இதற்கு தடுப்பு மருந்து உள்ளது.
இந்த மருந்தை, குழந்தைகளுக்கான தடுப்பு மருந்து அட்டவணையில் சேர்த்துள்ளனர். 11 வயதிலிருந்தே போட்டுக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு இரண்டு டோசாகவும், பெரியவர்களுக்கு மூன்று முறையும் போட வேண்டும். அதிகம் பாதிக்கும் வகை வைரசில், 16, 18வது வகை வைரசிடமிருந்து, 80 சதவீதம் பாதுகாப்பை தடுப்பு மருந்து தரும்.
கர்ப்பப்பை வாய் கேன்சரை தெரிந்து கொள்ள பேப்ஸ்மியர் பரிசோதனை உள்ளது. கர்ப்பப்பை வாய் பகுதியில் உள்ள செல்களை எடுத்து பரிசோதித்துப் பார்த்தால், கேன்சர் பாதிப்பு உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்வதோடு, அடுத்த 10 ஆண்டுகளில் கேன்சர் வரும் வாய்ப்பு உள்ளதா என்பதையும் எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
வாய்ப்பு உள்ளது
குறிப்பிட்ட செல்கள் கர்ப்பப்பை வாயில் இருந்தால், கேன்சர் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை முன்கூட்டியே சொல்ல முடியும்.
பத்து வயதிற்கு பின், பெண் குழந்தைகளுக்கு இந்த தடுப்பு மருந்தை போட வேண்டியது முக்கியம். முடியாவிட்டால், 40 வயதிற்கு மேலும் போடலாம். ஆனால், திருமணத்திற்கு முன் கர்ப்பப்பை வாய் தடுப்பு மருந்து போட்டுக் கொள்வது பாதுகாப்பானது.
ஆனால், இந்த வைரஸ் இருந்தால், அது நிச்சயம் கேன்சராக மாறி விடும் என்று சொல்ல முடியாது. 80 சதவீதம் பேருக்கு, ஒரு முறையாவது இந்த வைரசின் வகைகளில் ஏதோ ஒன்றிரண்டின் பாதிப்பு இருந்திருக்கிறது. 30 வயதிற்குள் இந்த பாதிப்பு இருந்திருக்கும். தானாகவே அடுத்த இரண்டு ஆண்டுகளில் அழிந்து விடும். சிலருக்கு கேன்சராக மாறி விடுகிறது.
பெண்களை பாதிக்கும் கேன்சரில், மார்பக கேன்சருக்கு அடுத்த இடத்தில் கர்ப்பப்பை கேன்சர் இருப்பதால், தடுப்பு மருந்து போட்டுக் கொள்வது பாதுகாப்பைத் தரும்.
டாக்டர் கே.தென்றல்,
மகளிர் நலசிறப்பு மருத்துவர்,
ரெயின்போ குழந்தைகள் நல மருத்துவமனை, சென்னை.
044 - 4012 2444
