சர்க்கரை நோயால் தோள்பட்டையை அசைக்க முடியாதது ஏன்
சர்க்கரை நோயால் தோள்பட்டையை அசைக்க முடியாதது ஏன்
PUBLISHED ON : ஆக 04, 2019

* என் வயது 74. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வலது முழங்காலில் மூட்டு மாற்று சிகிச்சை செய்து கொண்டேன். அதன் பின் வலி இல்லையென்றாலும் மூட்டின் அசைவு ஓரளவுக்கு தான் உள்ளது. இப்போது இடது முழங்காலில் வலி உள்ளது. அதற்கு மூட்டு மாற்று சிகிச்சை செய்யப்போகிறேன். மூட்டின் அசைவு அதிகமாக இருக்க சமீபத்தில் 'HIFLEX KNEE' வந்துள்ளதாக கேள்விப்பட்டேன். அவ்வாறு 'HIFLEX KNEE' பொருத்தப்பட்டால் மூட்டின் அசைவு நன்றாக இருக்குமா?
'HIFLEX KNEE' பொருத்தினால் அசைவு நன்றாக இருக்கும். ஆனால் அது தரமான தொழில்நுட்பத்தில் செய்யப்பட்டு இருக்க வேண்டும். இல்லையென்றால் பெரிய அளவில் பயன் கிடைக்காது. இதை மனதில் கொண்டு மருத்துவரிடம் ஆலோசிக்கலாம்.
n 22 வயதான எனக்கு ஓராண்டுக்கு முன் கபடி விளையாடும் போது மூட்டில் அடிபட்டது. ஏ.சி.எல்., என்னும் 'லிக்மென்ட்' கிழிந்து மூட்டில் நிலையற்ற தன்மையை உணர்ந்தேன். தற்போது திடீரென வலியும் ஓசையும் ஏற்படுகிறது. இதற்கு என்ன காரணம்?
கபடி விளையாடும் போது மூட்டில் அடிபட்டு ஏ.சி.எல்., என்னும் 'லிக்மென்ட்' கிழிந்தால் விரைவில் சீரமைத்துக்கொள்ள வேண்டும். 'லிக்மென்ட்' சரியாக இயங்காவிட்டால் மூட்டில் தேய்மானம் மற்றும் 'மெனிஸ்கஸ்' என்னும் உறுப்பு கிழிவதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால் 'ஆர்த்ரோஸ்கோபி' மூலம் ஏ.சி.எல்., என்னும் 'லிக்மென்ட்டை' சீரமைத்தால், நான்கு மாதங்களில் மீண்டும் விளையாட்டுகளில் பங்கு கொள்ள முடியும். பொதுவாக கபடி விளையாடும் முன் நன்றாக 'வார்ம்அப்' செய்ய வேண்டும். மூட்டில் உறை அணிந்து விளையாடினால் 'லிக்மென்ட்' கிழிவதை தவிர்க்கலாம்.
* சர்க்கரை நோய் உள்ள எனக்கு வலது புறத்தில் தீராத வலி உள்ளது. எலும்பு மூட்டு மருத்துவர் இதை 'பிரோஷன் ஷோல்டர்' என்று கூறுகிறார். என் தோள்பட்டையை அசைக்கவும் முடியவில்லை. இரண்டு எலும்பு மூட்டு மருத்துவர்களை சந்தித்து விட்டேன். ஒருவர் என் தோள்பட்டையை மயக்கம் கொடுத்து திருப்பிவிட வேண்டும் என்கிறார். மற்றொருவர் மூட்டு ஆர்த்ரோஸ்கோபி செய்து சரி செய்யலாம் என்கிறார். இதில் எதை செய்வது?
'பிரோஷன் ஷோல்டர்' என்னும் நோயில் தோள்மூட்டில் உறை இறுகி இருக்கும். 'ஆர்த்ரோஸ்கோபி' செய்தால் இறுகிய உறுப்பினை வானொலி அதிர்வு அலைகள் கொண்ட கருவிகள் மூலம் துல்லியமாக சீரமைக்க முடியும். வலியும் இருக்காது. இயல்பான வாழ்க்கைக்கு விரைவில் திருப்ப முடியும். அதுவே மயக்க மருந்து கொடுத்து தோள்பட்டையை திருப்பி விடும்போது வலி அதிகமாக இருக்கும். மேலும் மீண்டும் இறுகுவதற்கும் வாய்ப்புண்டு. ஆகவே நவீன தொழில்நுட்பத்தில் செய்யப்படும் 'ஆர்த்ரோஸ்கோபி' சிகிச்சை முறை சிறந்த பலனை அளிக்கும்.
- டாக்டர். கே.என்.சுப்பிரமணியன்
எலும்பியல் நிபுணர், மதுரை.
93442 46436

