PUBLISHED ON : ஆக 04, 2019

* பதட்ட நோயின் அறிகுறிகள் எவை?
இறுக்கமான மனநிலை, உடல் தசைகள் அனைத்தும் இறுக்கமாக இருப்பது போன்ற உணர்வு, உடல்வலி, நாக்கு வறட்சி, பேச்சில் தடுமாற்றம், வயிறு வலி, அடிவயிற்றில் இனம் புரியாத திகிலுடன் கூடிய பய உணர்வு, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதல், வேகமான, பலமான இருதயத்துடிப்பு, மூச்சு முட்டுதல், மூச்சுத்திணறல், மயக்கம், தலைசுற்றல், அதிக வியர்வை, குமட்டல், வாந்தி வருதல், தூக்கமின்மை போன்றவை பதட்ட நோயின் அறிகுறிகள் ஆகும். இவை பெரும்பாலும் உடல் ரீதியாக ஏற்படக்கூடிய நோய்களின் அறிகுறிகள். எனவே உடல்ரீதியான நோய் ஏற்பட்டுள்ளதாக கருதியே மருத்துவரை நாடுவர்.
பரிசோதனைக்குப் பிறகு எந்த ஒரு உடல் பிரச்னையும் இல்லையென்று முடிவான பிறகே அவர் பதட்ட நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழும்.
* பதட்டத்தால் பாதிக்கப்பட்டோருக்கு மனநல ஆலோசனை அவசியமா?
நிச்சயம் மனநல ஆலோசனை தேவை. பதட்டநோயால் அவதிப்படுவோர் மனநோய் பாதித்துள்ளது என்ற நிலையை ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள். குடும்ப மருத்துவர் அல்லது சிறப்பு மருத்துவர் இதனை எடுத்துக்கூறி மனநல ஆலோசனைக்கு அனுப்ப முயற்சி செய்தால் அவர்களிடம் கோபம் கொண்டு அவர்களையும் தவிர்ப்பார்கள். பதட்டநோய்களின் அறிகுறிகளுக்கான முக்கிய காரணம் உடலிலுள்ள தன்னிச்சையாக செயல்படும் நரம்பு மண்டலத் தூண்டுதலே.
மனநல மருத்துவர் அளிக்கும் சிகிச்சை பதட்டத்தை முழுமையாகச் சரி செய்தாலும், சிறிது காலத்திலேயே பரிந்துரைக்கப்பட்ட மருந்து மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனையை மீறி நிறுத்தி விடுவர். இதனால் பதட்டநிலை தொடர்ந்து நீடித்து நாட்பட்ட கோளாறாக மாறிவிடும். பதட்ட நிலையில் அவர்கள் எடுக்கும் முடிவுகள் சரியாக அமையாது.
பதட்டநோய் அறிகுறிகள் உடல் ரீதியான நோய்களை பல நேரங்களில் திசை திருப்பும் அபாயம் உண்டு. இது எதிர்மறையாகவும் நடக்கலாம். இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்க வேண்டியும் நோயாளிகளின் வற்புறுத்தலினாலும் மருத்துவர்கள் மீண்டும் மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகின்றனர். பதட்டநோய் பாதித்தவர்களுக்கு உறவினர்களோ, பராமரிப்பவரோ தவறான ஆலோசனைகள் வழங்கக்கூடாது. மிகவும் குறைந்த காலமே அல்லது தேவை ஏற்படின் மட்டுமே மருத்துவர் துாக்க மாத்திரைகளை பரிந்துரைப்பார். மருத்துவரின் ஆலோசனையை முறையாக கடைப்பிடிக்க உதவ வேண்டும்.
* பதட்டத்தை தவிர்க்கும் வழிகள் என்ன?
நல்ல நிலையில் உள்ள போது பதட்டத்தை தவிர்க்க ஓய்வு, தியானம், உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். மேலும் மனதிற்கு இதமளிக்கும் செயல்களை செய்வதும் நல்ல பலனை தரும். போதைப் பழக்கங்களை அறவே தவிர்க்க வேண்டும்.
- டாக்டர் தி.குமணன்
மனநல நிபுணர், மதுரை.
98431 65135

