PUBLISHED ON : மார் 23, 2016

கடந்த வாரத்தில் ஒரு நாள், என் நீண்ட நாள் வழக்கறிஞர் நண்பர், என்னிடம், 'ஒவ்வொரு மாதமும், 1,000 விவாகரத்து வழக்குகள்
பதிவாகின்றன. அதில், 'என்னை விட, அவளின் நாய்குட்டி தான் முக்கியம் என்கிறாள், என் மனைவி' என்பதில் துவங்கி, காரணங்கள் சுவாரஸ்யமாக இருக்கிறது' என்று, சிரித்துக் கொண்டே சொன்னபோது, எனக்கு வருத்தமாக இருந்தது. உறவுகளுக்குள் குறிப்பாக திருமண உறவில், ஏன் இத்தனை சிக்கல்? ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் பருமன் போன்றவற்றை, எப்படி வாழ்க்கை முறை மாற்றத்தினால் ஏற்றுக் கொள்கிறோமோ, அதுபோல மன அழுத்தம், மனப்பதற்றம் போன்ற மனம் தொடர்பான பிரச்னைகளை புரிந்து கொள்வதில்லை. 'ஸ்ட்ரெஸ்' என்பதைக் கூட, சற்று வித்தியாசமான, சந்தேக பார்வையோடு தான் பார்க்கிறோம்.கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்இதனாலேயே, திருமணத்திற்கு முன், இதுபோன்ற மனப் பிரச்னைகளுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள், தொடர்ந்து சிகிச்சையில் இருப்போர், ஒன்று, தங்கள்
பிரச்னைகளை மறைத்து திருமணம் செய்கின்றனர், அல்லது மணமான பின், தங்களின் துணைக்கு தெரிந்து விடுமோ என்று, பயந்து, மருந்து சாப்பிடுவதை நிறுத்தி விடுகின்றனர். இதனால் பிரச்னை இன்னும் பெரிதாகி, வெளியில் தெரிந்து, அதனால் சேர்ந்து வாழ விரும்புவதில்லை.தங்களுக்கு இதுபோன்ற மனப் பிரச்னைகள் இருப்பதே தெரியாமல், திருமணம் செய்து பிரச்னை வெளியில் தெரியும் போது விவாகரத்தில் முடிகிறது.அடுத்தது, வெளிப்படையாக சொல்லாவிட்டாலும், பெண்கள், தங்களை விட
படித்தவராக, அதிகம் சம்பாதிப்பவராக, தனித்தன்மையோடு இருப்பதை, பெரும்பாலான ஆண்களால் ஆரோக்கியமாக எடுத்துக் கொள்ளவதில்லை. தங்களின் ஆதங்கத்தையும், இயலாமையையும் சம்பந்தமேயில்லாத வேறு பல விதங்களிலும் வெளிப்படுத்துகின்றனர்.
அந்தக் காலத்தில் இருப்பதுபோல, 'கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்' என்று பொறுத்துக் கொள்ள, தற்போதைய பெண்கள் தயாரில்லை. தங்களின் சுய மரியாதையை, தனித்தன்மையை இழந்து, இப்படி ஒரு உறவு தேவையில்லை என்று, முடிவு செய்கின்றனர்.
அன்பும், அக்கறையும் அவசியம்அடுத்ததாக, காதல் திருமணமானாலும், பெற்றோரால் நிச்சயித்த திருமணம் ஆனாலும் ஆண், பெண் இருவரிடமும் எதிர்பார்ப்புகள் அதிகமாகி விட்டது. இருவருக்குமே, திருமணத்திற்கு பின்தான், வாழ்க்கையின் பல யதார்த்தங்கள் புரிய ஆரம்பிக்கிறது. வெளிநாடுகளில், இரண்டு தனி நபர்கள் சேர்ந்து வாழ்வது திருமணம். ஆனால், நம் நாட்டில் இருவேறு குடும்பங்கள்
சேருவது திருமணம்; இதை புரிந்து கொள்ள வேண்டும்.பிரச்னைகளே இல்லாமல் இருந்தாலும், வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்காது. பிரச்னைகளை எப்படி கையாள்கிறோம் என்பதில் தான், புத்திசாலித்தனம் இருக்கிறது. எவ்வளவு பிசியாக இருந்தாலும் தினமும், 15
நிமிடங்கள் கணவன், மனைவி இருவரும் பேசுவதற்கு நேரம் ஒதுக்க வேண்டும். இரு தனிநபர்கள் சேர்ந்து வாழும்போது யார் பெரியவர், யார் சிறியவர், எந்த வேலை யாருடையது என்பதெல்லாம் கிடையாது; எல்லாமே இருவருக்கும் பொதுவானவை. ஒருவர் மற்றவர் மீது காட்டும் அன்பும், அக்கறையும் விட்டுக் கொடுப்பதும் பிரச்னைகளை பேசித் தீர்த்துக் கொள்ளும் பக்குவத்தை தரும்.
டாக்டர் லட்சுமி விஜயகுமார்
மனநல சிறப்பு மருத்துவர்
