PUBLISHED ON : ஜூலை 27, 2021

கொரோனா, டெங்கு பாதித்தால், கருவில் வளரும் குழந்தைக்கு எந்த பாதிப்பும் இருப்பதில்லை. ஆனால் ஸிகா வைரஸ் அப்படியல்ல. கர்ப்ப காலத்தில் முதல் இரண்டு மாதங்களில் ஸிகா வைரஸ் பாதித்தால் கருச்சிதைவு, ஏழு - எட்டு மாதங்களில் என்றால் குழந்தை இறந்தே பிறக்கும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளது.
ஸிகா வைரஸ் பாதித்த கர்ப்பிணியின் கரு முழு வளர்ச்சி பெற்றாலும், பிறக்கும் குழந்தையானது பிறவிக் குறைபாடுடன் பிறக்க வாய்ப்புகள் அதிகம். குழந்தையின் தலை வழக்கமான அளவில் இல்லாமல் சிறிதாக இருக்கும்.
'மைக்ரோசெபாலி' எனப்படும் மூளையின் அளவு போதுமான அளவு வளர்ச்சி அடையாமல், குறைபாடுடன் இருக்கும். நரம்பு மண்டல பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். ஸிகா வைரஸ் பரவும் பகுதிகளுக்கு செல்வதை கர்ப்பிணியர் முழுதும் தவிர்க்க வேண்டியது அவசியம்.
கொசு கடிக்காமல் பார்த்துக் கொள்வது, திருமணமான பெண்களுக்கு ஸிகா பாதிப்பு ஏற்பட்டால், குணமான பின், அடுத்த மூன்று மாதங்கள் கர்ப்பம் தரிக்காமல் இருப்பது நல்லது. பாதிப்பு உள்ள பகுதியில் வசிப்பவர்கள், அடுத்த சில மாதங்களுக்கு கர்ப்பத் தடை மாத்திரைகளை பயன்படுத்தலாம்.
வைரஸ் பாதித்தவருடன், பாதுகாப்பற்ற உடலுறவு கொள்வதாலும் நோய் தொற்று அபாயம் அதிகம். தொற்று இருப்பவரிடம் இருந்து ரத்தம் தானமாக பெறுவதாலும் வரலாம். மலைப்பாங்கான, அதிக நீர் தேங்கும் இடம் என்பதால், கேரளாவில் ஏடிஸ் வகை கொசுக்கள் அதிகமாக உள்ளன. பொதுவாக இவை பகலில் கடிக்கும் தன்மை கொண்டவை.
'ஏடிஸ் ஏஜிப்டி' என்ற கொசுக்கள் தான் டெங்கு, ஸிகா என, இரண்டு தொற்றையும் பரப்புகின்றன. ஆனாலும், டெங்கு அளவிற்கு ரத்த உறைவை ஏற்படுத்தும் தீவிர பிரச்னைகள் ஸிகாவில் கிடையாது.
ஸிகா பாதித்தால், பொதுவாக அறிகுறிகள் வெளியில் தெரியாது. சில சமயங்களில் காய்ச்சல், தோலில் சிவந்த திட்டுகள், தலைவலி, கண்கள் சிவந்து போவது, தசைகளில், மூட்டுகளில் வலி இருக்கும்.
வைரஸ் உடலுக்குள் சென்று, அதன் பாதிப்பு வெளியில் தெரிவதற்கு மூன்று - 14 நாட்கள் ஆகலாம். அறிகுறிகள் தெரிந்த பின், பாதிப்பு இரண்டு வாரங்கள் இருக்கலாம். அறிகுறிகள் இருக்கும் போதே பரிசோதனை செய்தால் மட்டுமே பாதிப்பை உறுதி செய்ய முடியும்.
ஸிகா வைரஸ் பாதிப்புக்கு பிரத்யேக மருந்துகளோ, சிகிச்சையோ, தடுப்பு ஊசியோ இதுவரை கிடையாது. 'சப்போர்டிவ் மெடிசின்' என்று சொல்லப்படும் ஆதரவு சிகிச்சை தான் தரப்படுகிறது. உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியம். திரவ ஆகாரங்கள், தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். முழுமையாக ஓய்வில் இருப்பதும், நம் உடல் பழைய நிலைக்கு திரும்ப உதவும்.
டாக்டர் கவிதா கவுதம்,
இயக்குனர்,
புளூம் கருத்தரிப்பு மையம், சென்னை
drkavithagautham@gmail.com
