PUBLISHED ON : பிப் 13, 2024 12:00 AM
சென்னையில் நடந்துவரும் 47 வது புத்தகக்காட்சியை சுற்றிவரும் போது அந்தக் காட்சி கண்ணில் பட்டது.
புத்தகம் விற்கும் அரங்கு ஒன்றின் வாசலில் வெள்ளை வேட்டி,வெள்ளை சட்டை,இடுப்பில் கட்டிய துண்டு, மார்பில் ருத்ராட்ச மாலை, நெற்றி நிறைய விபூதி பட்டை, மயக்கும் புன்சிரிப்புடன், பால்மணம் மாறாத முகங்கொண்ட சிறுவன் ஒருவன் கைகளில் சில புத்தகங்களை வைத்துக்கொண்டு சிவபுரம் புத்தக அரங்கில் விற்பனை செய்து கொண்டு இருந்தான்.
நெருங்கி விசாரித்த போதுதான் தெரிந்தது, அந்தப்புத்தகங்கள் அனைத்தும் அந்தச்சிறுவனே எழுதியது என்று.
சென்னை வளசரவாக்கத்தில் செயல்பட்டுவரும் சிவபுரம் அறக்கட்டளை, குருவாக இருப்பவர் சிவபுரம் ஐயா தம்பிரான் தோழர் கபிலனார்.
இவர் மன்றத்தின் உறுப்பினர் குடும்பத்து பிள்ளைகளுக்கு மெய்யறிவு பாடம் நடத்தி வருகிறார். மூன்று வயது முதல் எத்தனை வயதுவரை வேண்டுமானாலும் மெய்யறிவைக் கற்றுக் கொள்ளலாம்.
தமிழை, சிவனை, நல்லொழுகத்தை, தத்தம் திறமையை அறியும் அறிவை உணர்த்துவதே இந்த மெய்யறிவாகும்.
இவரிடம் பாடம் படித்த சபரீஷ்--பிரதீபா தம்பதியினரின் மகன் கலசன் பத்து வயதாகும் போது சிவபாத பூஜை செய்யும் போது அவனுக்குள் சிவபெருமான் திருவருள் வெளிப்பட்டது அன்று முதல் கவிதை எழுத ஆரம்பித்தான், கவிதைகள் நன்றாக இருக்கவே அனைவரும் ஊக்குவித்தனர்.
அன்று முதல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆன்மீகம், சமூகம், நட்பு, அன்பு, உண்மை, ஒழுக்கம் என்பதை வலியுறுத்தி சிறுசிறு கவிதை எழுத ஆரம்பித்தான்.
அந்தக் கவிதைகளை தொகுத்து 'கலசம் வருகிறது' என்ற தலைப்பில் புத்தகம் போடப்பட்டது அந்தப் புத்தகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே தொடர்ந்து 'நெஞ்சே ஒரு தாளாக' 'அடியேனை ஆண்ட இன்பொருளே' 'வானத்தை வாழ்த்திவிட்டு உறங்கினேன்' என்பது போன்ற தலைப்பில் கவிதை புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்.
அந்தக்கவிதை புத்தகங்களைத்ததான் புத்தகக்காட்சியில் விற்பனை செய்து கொண்டு இருந்தார்.
கலசம் வருகிறது என்ற புத்தகத்தில்
மனதைக் கொடுத்தால் பகைக்கிறார்கள்
காசைக் கொடுத்தால் நடிக்கிறார்கள்
இதில் தெய்வத்தைக்கூட மறக்கிறார்கள்...
என்ற வரிகளைப் படித்த போது இவ்வளவு ஆழமான வரிகளின் அர்த்தம் இந்த வயதில் உணர்ந்துதான் எழுதியிருக்கிறாரா? என்று அவரிடம் கேட்ட போது தெளிவான தீர்க்கமான பதில் கிடைத்தது.
உங்கள் வயதில் உள்ள குழந்தைகளைப் போல உங்கள் உடையோ, உருவமோ இல்லையே.. என்ற வருத்தம் உங்களுக்கு உண்டா என்று கேட்ட போது? வருத்தமா! அறவே கிடையாது, மகிழ்ச்சிதான் மனம் நிறைய இருக்கிறது.
நான் என் குழந்தை பருவத்திற்குரிய எந்த சந்தோஷத்தையும் இழக்கவில்லை, குறைக்கவில்லை, அதே நேரம் பத்தோடு பதினொன்றாக இருக்கவும் விரும்பவில்லை.
வாழ்க்கை என்பது அறத்துடன் வாழ்தலே என்ற எங்கள் குருவின் கொள்கையில் வாழ்கிறேன், வளர்கிறேன் ஆசி கூறி வாழ்த்துங்கள், எனது புத்தகங்களை வாங்கி உங்கள் குழந்தைகளுக்கு பரிசாக கொடுங்கள், ஈசனையும் தமிழையும் எக்காலமும் மறக்காமல் இருக்க கற்றுக்கொடுங்கள் என்ற இந்தச்சிறுவனிடம் பேசுவதற்கான எண்: 9025309680.
- -எல்.முருகராஜ்.