PUBLISHED ON : மார் 04, 2026 07:35 PM

இந்தியாவின் பாதுகாப்புப் படையில் மனிதர்களுக்கு நிகராகப் போற்றப்படும் நாய்கள், தங்களின் விசுவாசத்தாலும், அபாரமான திறமையாலும் பலமுறை தேசத்தைக் காத்துள்ளன. அந்த வரிசையில், ஹைதராபாத்தில் ஓய்வுபெற்ற மத்திய தொழில் பாதுகாப்புப் படை மோப்ப நாய் 'டாலி' ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது.
டாலி, உலகிலேயே மிகவும் புத்திசாலி மற்றும் மென்மையான ரகமாகக் கருதப்படும் லாப்ரடார் ரிட்ரீவர் பிரிவைச் சேர்ந்தது. மோப்ப சக்தியில் தன்னிகரற்ற இந்த ரகம், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் பணியாற்றுவதற்கு ஏற்றது.
டாலி தனது 2 வயதில் பயிற்சியை முடித்துவிட்டுப் பணியில் சேர்ந்தது. கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக அது செய்த சாதனைகள் மகத்தானவை ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்தில் டாலி தனது பெரும்பாலான பணிக்காலத்தைக் கழித்தது. ஆயிரக்கணக்கான பயணிகளின் பைகளை நொடிப்பொழுதில் சோதனை செய்து, பாதுகாப்பை உறுதி செய்தது.எத்தகைய நுணுக்கமான வெடிபொருட்களையும் அதன் வாசனை மூலம் கண்டுபிடிப்பதில் டாலி ஒரு நிபுணர். சர்வதேச கடத்தல்களைத் தடுப்பதிலும், போதைப்பொருட்கள் இந்தியாவிற்குள் நுழைவதைத் தடுத்ததிலும் டாலி முக்கியப் பங்கு வகித்தது.
இதற்கான பிரவுபசார விழாவில் டாலிக்கு ஒரு போர் வீரருக்கு அளிக்கப்படும் அனைத்து கௌரவங்களும் அளிக்கப்பட்டன:டாலியின் கழுத்தில் 'சிறந்த சேவைக்கான' பதக்கம் அணிவிக்கப்பட்டது.பல ஆண்டுகளாக டாலியைப் பராமரித்து, அதனுடன் நிழலைப் போலத் தொடர்ந்த அதன் பயிற்சியாளர் , டாலியை ஆரத்தழுவி விடை கொடுத்தது அனைவரையும் கலங்கச் செய்தது. பாதுகாப்புப் படை வீரர்கள் வரிசையாக நின்று கைதட்டி, அந்த வீர நாய்க்கு மரியாதை செலுத்தி வழியனுப்பினர்.
மௌனமான மொழியில் தேசத்திற்குப் பெரும் சேவையாற்றிய 'டாலி' போன்ற நாய்கள், பாதுகாப்பின் அடையாளங்கள் மட்டுமல்ல, மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான ஆழமான அன்பிற்குச் சான்றுகள். விடைபெற்றுச் செல்லும் டாலியின் சேவை எப்போதும் நினைவுகூரப்படும்.
---எல்.முருகராஜ்

