PUBLISHED ON : ஏப் 15, 2025 12:00 AM

2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கைக்கான விருது வாங்கியிருக்கிறார் நடன ஆசிரியர் பொன்னி.
துாத்துக்குடியில் பிறந்து வளர்ந்தவர்.
ஆணாகப்பிறந்த இவர் தன் பருவ வயதில் தன்னைப் பெண்ணாக உணர்ந்திருக்கிறார் தான் ஒரு திருநங்கை என்பதையும் புரிந்து கொண்டார்.
இவரை விட இவரது நிலையை அதிகம் புரிந்து கொண்டவர் பொன்னியின் தாய்தான்.
நீ என்னாவானாலும் சரி என் புள்ள நான் உன்னை எப்போதும் கைவிடப்போவது இல்லை என்று சொல்லி அதிகம் அன்பையும் பாசத்தையும் கொட்டி வளர்த்தார்.
கணக்கு பாடத்தில் பொன்னி கெட்டிக்காரி என்பதால் சக மாணவர்கள் சந்தேகம் கேட்டு தெளிவு பெறுவர் இதன் காரணமாக பொன்னியை யாரும் கேலி செய்துவிடாமல் மனதைக் காயப்படுத்திவிடாமல் பார்த்துக் கொண்டனர்.
பின்னர் வருமானத்திற்காக மூட்டை துாக்கும் கூலி வேலைக்கு ஆண் தோற்றத்தில் சென்று வேலை பார்த்தார் சில நாளில் வேடம் கலைந்தது,கூட இருப்பவர்கள் மிருகங்களாகிவிடுவனரோ என பயந்தார் ஆனால் அந்த முரட்டு மனிதர்களிடம்தான் இளகிய இதயம் இருந்தது.,பொன்னியை அரண் போல பாதுகாத்தனர்.
இந்த நிலையில் எனக்கென தனி அடையாளம் வேண்டும் என முடிவு செய்து சிறு வயது முதல் ஆசைப்பட்ட பரதம் கற்றுக்கொள்ள விரும்பினார்,பரதப்பள்ளி ஆசிரியரோ ஆண்களுக்கே இங்கே பரதம் கற்றுத்தருவதில்லை திருநங்கையான உனக்கு எப்படி கற்றுத்தருவது என்று சொல்லி மறுத்தார்.
கலையைக் கற்றுத்தர பாலின பேதம் பார்க்காதீர்கள் என்று கெஞ்சிக் கேட்டு பலமுறை நடையாய் நடந்து முடிவில் பரதம் கற்றுத்தேர்ந்தார்,தனது பரதத்தால் கற்ற பள்ளிக்கே பெருமையும் தேடித்தந்தார்.
இந்த நிலையில் சென்னை கொடுங்கையூர் பகுதிக்கு வந்து சேர்ந்த பொன்னி தான் கற்ற கலையை அனைவருக்கும் கற்றுக் கொடுக்க எண்ணி இந்தப் பகுதியில் உள்ள பாமரர்களின் வீடுகளுக்கு சென்று பிள்ளைகளை பரதம் கற்க அனுப்பும்படி கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்.
இவரது அணுகுமுறையில் ஆரம்பத்தில் ஒரு சில குழந்தைகள் இவரிடம் வந்து பரதம் கற்றனர்,அப்படிக் கற்றுக்கொண்ட குழந்தைகளின் நேர்த்தியான ஆட்டத்திறனால் மேலும் மேலும் குழந்தைகள் வர இப்போது பொன்னியின் பரத நாட்டியப்பள்ளியில் நிறைய குழந்தைகள் பரதம் கற்றுக்கொண்டு வருகின்றனர்.
தான் மட்டும் வளர்வது வளர்ச்சியல்ல தன்னைச் சார்ந்த சமூகமும் வளர முயற்சி செய்பவரே மனிதகுலத்திற்கு தேவை பொன்னி அந்த தேவையை நிறைவு செய்பவராவார்.
அவருக்கு இந்த 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கைக்கான விருதினை தமிழக அரசு வழங்கி சிறப்பித்துள்ளது.நாமும் நமது பங்கிற்கு பொன்னியை வாழ்த்துவோம்.
-எல்.முருகராஜ்