PUBLISHED ON : பிப் 08, 2016

'ஆப்டிக்கல் இல்யூஷன்' (Optical Illusion) கேள்விப்பட்டிருப்பீர்கள். 'மாயத் தோற்றம்' என்று இதை விளக்கலாம். சில பொருட்களைப் பார்க்கும் போது, அவற்றில் இல்லாத ஒரு விஷயம் இருப்பது போல நமக்கு ஒரு மாயத் தோற்றம் கிடைக்கும். உதாரணத்திற்கு இருபரிமாணத் தோற்றத்தில் வரையப்படும் ஓவியங்களில் உள்ள உருவங்கள், நம் கண் முன் இருப்பது போல, ஒரு முப்பரிமாணத் தோற்றத்தைக் கொடுக்கும். இது கூட ஒரு மாயத்தோற்றம்தான். நமது கையின் உருவத்தைத் தாளில் ஒட்டிய மாதிரி, ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் வரையப் போகிறோம்.
தேவைப்படும் பொருட்கள்:A4 அளவு தாள் கருப்பு, சிவப்பு ஸ்கெட்ச் பேனா
1. ஒரு வெள்ளைத் தாளில் விரல்களை விரித்த மாதிரி கையை வையுங்கள். கையைச் சுற்றிப் பென்சிலால் மெல்லிய கோடு வரைந்து அச்சு எடுத்துக் கொள்ளுங்கள்.
2. கை அச்சின் இடப்பக்கத்திலிருந்து, வலப்பக்கம் செல்லுமாறு கருப்பு
ஸ்கெட்ச் கொண்டு கோடுகள் வரைய வேண்டும். இந்தக் கோடுகள் தாளின் இடப்பக்க முனையில் தொடங்கி, கை அச்சின் வெளிக்கோட்டைத் தொடும்வரை, நேராகச் செல்ல வேண்டும். கையினுள் கோடுகள் செல்லும்போது, சற்று மேல் நோக்கிய வளைவுகளாக மாறி, கையின் மறுபக்கம் வெளிவரும் போது நேராக வெளிவர வேண்டும்.
3. விரல்களுக்குள் கோடுகள் வரையும் போது ஒவ்வொரு விரலிலும் மேடுகளை வரைய வேண்டும்.
4. கருப்புக் கோடுகளை ஒட்டி, சிவப்பு நிறத்தில் பட்டைகளாகக் கோடுகள் தீட்ட வேண்டும்.
இப்போது தாளில் ஒரு கையின் உருவம் ஒட்டியிருப்பது மாதிரி தெரிகிறதா?
சில கோணங்களில் பார்த்தால் கை உருவம் தாளில் இருந்து வெளிவருகிற மாதிரி தோற்றம் கிடைக்கும்.

