நாங்க ரெடி! பரீட்சை ரெடியா? +2தமிழில் மதிப்பெண் அள்ள!
நாங்க ரெடி! பரீட்சை ரெடியா? +2தமிழில் மதிப்பெண் அள்ள!
PUBLISHED ON : பிப் 08, 2016
அனைத்துப் பாடங்களிலும் நல்ல மதிப்பெண் அவசியம். இதர பாடங்களின் மீது மட்டும் கவனத்தைக் குவித்துவிட்டு மொழிப் பாடங்கள் மீது அசட்டை கூடாது. மொத்த மதிப்பெண்ணை அதிகரிப்பதில் மொழிப் பாடங்களுக்கும் பங்கு இருக்கிறதல்லவா? உயர் படிப்புகளிலும் உச்சம் பெற மொழியறிவே முதல் துணை. ஆகவே, இங்கு தமிழில் கூடுதல் மதிப்பெண் பெற ஆலோசனைகள் சில…
தமிழ் முதல் தாள்
01. ஒரு மதிப்பெண் வினாக்களுக்குரிய விடைகளை அட்டவணைப் படுத்திக்கொள்ளுங்கள்.
02. திருக்குறளின் நான்கு அதிகாரங்களையும் குறள், கருத்து அடிப்படையில் நன்கு படித்துவிடவும். 25 மதிப்பெண் வரை வாய்ப்பு இருக்கிறது.
03. சிறு வினா, பெரு வினாக்களுக்குரிய விடைகளைத் தலைப்புகளுடன் எழுத வேண்டும்.
04. நெடு வினாவுக்கு பொதுத் தலைப்பு, உட் தலைப்புகளுடனும் முன்னுரை, முடிவுரையுடனும் பதில் எழுதவும். இடையிடையே பாடல் அடிகளைச் சான்று காட்டி எழுதலாம்.
05. உவமையணி, எடுத்துக்காட்டு உவமை அணி, சொற்பொருள் பின்வரு நிலையணி ஆகியவை மிகவும் முக்கியமானவை. இவற்றை, சான்று, அணி சுட்டல், அணி இலக்கணம், அணிப் பொருத்தம் ஆகிய படிநிலைகளோடு விளக்க வேண்டும்.
06. பொருண்மொழிக் காஞ்சி, பொதுவியல் திணை முக்கியமானவை. திணை அல்லது துறையின் இலக்கணம், சான்று விளக்கம் என்ற படிநிலைகளில் எழுத வேண்டும்.
07. மனப்பாடப் பகுதி எழுதும்போது நூலின் பெயரையும் ஆசிரியர் பெயரையும் குறிப்பிடுவது சிறப்பு. பா வகைகளை அட்டவணைப் படுத்திக் கொள்ளவும்.
08. பாடலடிகளைக் கொடுத்து கேட்கப்படும் வினாக்களுக்கு தொகை நூல்கள், பாண்டியன் பரிசு பகுதிகளை நன்கு படிக்கவும்.
09. 'உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக' பகுதியில் உள்ள 16 வினாக்களுக்குரிய விடைகளை, வினா எண் மாறாமல் வரிசையாக ஒரே பக்கத்தில் வருமாறு எழுதுதல் நல்லது
10. இலக்கணக் குறிப்பு வினாவிற்கு பண்புத் தொகை, வினைத் தொகை, உவமைத் தொகை, எண்ணும்மை, உரிச்சொற்றொடர், அடுக்குத் தொடர் போன்றன தொகுத்து வைத்துக் கொள்ளவும்.
தமிழ் இரண்டாம் தாள்
01. பெருவினாக்களுக்குள் முதற்பகுதி முதல் நான்கு பாடங்களிலிருந்தும், இரண்டாம் பகுதி அடுத்த நான்கு பாடங்களிலிருந்தும் கேட்கப்படும். தலைப்பிட்டு விடையே ஒரு பக்கத்திற்கு குறையாமல் எழுதவேண்டும்.
02. நெடு வினா: முதல் நான்கு பாடங்களிலிருந்து ஒரு வினாவும், அடுத்த நான்கு பாடங்களிலிருந்து ஒரு வினாவும் கேட்கப்படும். இதற்குப் பொதுத் தலைப்பு, முன்னுரை, உட்தலைப்புகள், முடிவுரையோடு பதில் இருக்க வேண்டும்.
03. துணைப் பாடப் பகுதியில் 1) 'கருப் பொருளும் சுவையும் குன்றாமல் எழுதுக' பகுதியிலும், 2) 'மனம் கவர்ந்த கதை மாந்தரின் பண்பு நலன்களைத் திறனாய்வு செய்தல்' பகுதியிலும், முன்னுரை, உட்தலைப்புகள், முடிவுரை ஆகியவை முக்கியம். ஆசிரியர் பெயர், குறிப்புச் சட்டகம், கதை மாந்தர்கள் பட்டியல் எழுதுவது விடைக்கு சிறப்பு சேர்க்கும்.
04. நாடக வடிவில் அல்லது உரையாடல் வடிவில் எழுதும்போது ஒவ்வொரு காட்சியிலும் களம், காலம், பங்கு பெறும் கதை மாந்தர்கள் பற்றிக் குறிப்பிடுதல் வேண்டும்.
05. செய்யுள் நயம் பாராட்டுதலில் அமைய வேண்டிய தலைப்புகள்: முன்னுரை, ஆசிரியர் குறிப்பு, திரண்ட கருத்து, பொருள் நயம், சொல் நயம், தொடை நயங்கள், அணி நயம், கற்பனை நயம், சந்த நயம், சுவை நயம், முடிவுரை. ஒவ்வொரு நயங்களிலும் சிறப்பான அடைமொழிகளை எடுத்துக் காட்டுங்கள்.
06. ஆங்கிலப் பழமொழிகளை தமிழ் மரபுக்கேற்ற வகையில் தமிழாக்கம் செய்ய வேண்டும்.
07. பழமொழிகளை வாழ்க்கை நிகழ்வோடு பொருத்தி எழுதும் பகுதிக்கு பழமொழி, பழமொழி உணர்த்தும் பொருள், வாழ்க்கை நிகழ்வு எனத் தலைப்புகள் வைத்து எழுத வேண்டும்.
08. இன்றியமையாப் பகுதிகளை அடிக்கோடிட்டு, தனித்துத் தெரியும்படி எழுத வேண்டும்.
புலவர் சு. மதியழகன்,
தேசிய நல்லாசிரியர்
