PUBLISHED ON : பிப் 08, 2016

மஞ்சு: ஹே சங்கர்! அந்த மரத்துல இருந்து ஒரு பலாப்பலம் பலுத்து பல்லத்துல விலுந்துருச்சுடா.
சங்கர்: தப்புத் தப்பா தமிழ் பேசுறே. அந்தப் பழம் உன் தலைல விழுந்து இருக்கணும்…
ம: எனக்கு அப்படிதான் பேச வருது. நா என்ன பண்ணட்டும்?
ச: ஈஸியாவே சரியாப் பேசலாம். எப்படினு சொல்லித் தரேன்.
ம: சொல்லிக் குடு, சொல்லிக் குடு… எவ்ளோ ஸ்பீடா பிக் அப் பண்றேன்னு மட்டும் பாரு.
ச: 'பல்'லுல இருக்குற 'ல' சொல்லும்போது நாக்கின் நுனி, மேல்வரிசை முன்பல்லின் பின்புறத்தைத் தொடணும். அதாவது, மேல் அண்ணமும் மேல் வரிசைப் பற்களும் சந்திக்கிற இடத்தை…
ம: சங்கர் நல்லவன்! ஹா ஹா... சரியா சொல்லிட்டேனா?
ச: உச்சரிப்பும் சரிதான். கருத்தும் சரிதான்! 'பள்ளம்'ங்கிறதுல வர்ற 'ள' சொல்லும்போது நாக்கின் நுனி, உள்வாய் மேல்புறத்தின் பள்ளமான பகுதியைத் தொடணும். அதாவது, மேல் அண்ணத்தைத் தொடணும்.
ம: பள்ளிக்கூடம் பக்கத்துல பெரிய பள்ளம் இருக்கு! இதையும் சரியாச் சொல்லிட்டேனே…
ச: 'வாழைப்பழ'த்தில் வரும் 'ழ' சொல்லும்போது, பழத்தை முழுங்குற மாதிரி நாக்க உள்ள இழுத்து மடக்கணும். அதாவது, நாக்கு எங்கேயும் தொடக் கூடாது. எங்கே சொல்லு…
ம: வாழைப்பழத் தோல் வழுக்கி சங்கர் விழுந்தான்.
ச: நான் விழுந்தது விஷயம் இல்லை. இப்போ நீ தமிழை சரியா உச்சரிக்கிறே பாரு, அதான் விஷயம்!
ம: மரத்துல இருந்து ஒரு பலாப்பழம் பழுத்து பள்ளத்துல விழுந்துருச்சு!
ச: ல, ள, ழ மூணும் கரெக்ட்டாச் சொல்லிட்டே. அதாவது, தேறிட்டே…
ம: தேங்க்ஸ். அப்பிடியே சும்மாச் சும்மா 'அதாவது'ன்னு சொல்றதைக் குறைச்சுக்க நீ முயற்சி பண்ணேன்…

