வர்த்தக சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்பிய 12 வயது சிறுமி
வர்த்தக சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்பிய 12 வயது சிறுமி
PUBLISHED ON : ஜூலை 03, 2017

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த சிறுமி, மிகைலா உல்மருக்கு தற்போது 12 வயதுதான் ஆகிறது. ஆனால் என்ன? 20 மாகாணங்களில் அமோகமாக விற்பனையாகும் இயற்கை குளிர்பான நிறுவனமான 'மி அண்ட் த பீஸ் லெமனேட்' (Me & the Bees Lemonade) கம்பெனியின் தலைமைச் செயல் அதிகாரி (சி.இ.ஓ.) அவர்தான். கடந்த 2016ல், அவருடைய கம்பெனி விற்பனை செய்த லெமனேட் குளிர்பான பாட்டில்களின் எண்ணிக்கை மட்டும் 3 லட்சம்.
சிறுவயதிலேயே, பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனத்தை எப்படி கட்டியெழுப்பினார்? உல்மருக்கு நான்கு வயதாக இருக்கும்போது, தேனீக்களிடம் இரண்டுமுறை கொட்டுப்பட்டார். இதனால், தேனீக்கள் என்றாலே அவருக்குப் பயம். இதைப் போக்க அவரது அம்மா திட்டமிட்டார். தேனீக்களின் வாழ்க்கைமுறை பற்றி ஆய்வு செய்ய உல்மருக்கு அறிவுறுத்தினார். அந்த ஆய்வுதான், தேனீக்களிடம் அளவில்லா பாசத்தை உல்மரிடம் ஏற்படுத்தக் காரணமாய் அமைந்தது.
'தேனீக்கள் அழியும் நிலையில் இருக்கிறது என்பதை அறிந்தபோது, மிகவும் வருத்தமுற்றேன். ஒட்டுமொத்த தேனீக்களும் இப்பூமியிலிருந்து காணாமல் போனால், மனிதர்கள் இப்பூமியில் நான்கு ஆண்டுகளுக்குத் தாக்குப்பிடிக்க முடியாது என்று ஐன்ஸ்டீன் கூறியதை அறிந்து அதிர்ந்துபோனேன். எனவே, தேனீக்களைக் காக்க முடிவு செய்தேன். அப்போதுதான், என் பாட்டியின் இயற்கை குளிர்பான செய்முறை நினைவுக்கு வந்தது. சர்க்கரைக்கு பதிலாக இயற்கை இனிப்பைத் தரும் தேனைப் பயன்படுத்தி, புதுவித எலுமிச்சை பானத்தை தயாரிப்பது என்று முடிவு செய்தேன். மிகவும் ருசியான அந்தப் பானத்தை தயாரிக்கும்முறை பரம்பரை பரம்பரையாக எங்களுக்கு சொல்லித்தரப்பட்டு வருகிறது' என்கிறார் உல்மர்.
இதைத் தொடர்ந்து, 2009ல் 'பீ ஸ்வீட் லெமனேட்' நிறுவனத்தை தொடங்கினார் உல்மர். இவரது புதிய பானத்தின் சுவையை அறிந்த ஹோல் புட்ஸ் என்ற சூப்பர் மார்க்கெட் நிறுவனம் ஒன்று, 70 கோடி ரூபாய்க்கு உல்மருடன் ஒப்பந்தம் போட்டது. மேலும், தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலமும், அவருக்கு நிறைய முதலீடுகள் கிடைத்தன. இவரது புதிய பானத்தைச் சுவைத்த அப்போதைய அதிபர் ஒபாமா, உல்மரை வெகுவாகப் பாராட்டினார். 2016ம் ஆண்டின் சிறந்த சில்லறை வர்த்தகர் விருதை பெற்றுள்ளார் மிகைலா உல்மர்.
தன் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையைத் தேனீக்களைக் காப்பாற்றுவதற்காகச் செலவிட்டுவரும் உல்மர், தற்போது, 'சமூகத் தொழில்முனைவோர் ஆவது எப்படி?' எனப் பலருக்கும் வகுப்புகள் எடுத்து வருகிறார். ' நான் வியாபாரத்திற்குப் பெரிதும் நம்புவது தொழில்நுட்பத்தைத்தான். நவீன வழிமுறைகளைப் பயன்படுத்தி, வரவு செலவு கணக்குகளைப் பராமரிக்க வேண்டும். என் தந்தை அதைத்தான் எனக்கு வலியுறுத்தினார். குறிப்பாக இணையவழியில் பராமரித்தால், உங்கள் குழு நபர்களோடு அதை எளிமையாகப் பகிர முடியும். தற்போது, என் நண்பர்களுக்குப் பணம் ஈட்டும் வழிமுறை குறித்து, ஆலோசனைகளை வழங்கி வருகிறேன். பிரச்னைகளுக்குத் தீர்வு சொல்வது என்றால் எனக்கு மிகவும் விருப்பம்' என்கிறார் உல்மர்.
- சிவசக்தி
