
உங்களுக்கு என்று பிரத்யேகமாக ஒரு புத்தகம், அதில் நீங்களே ஒரு பாத்திரமாக வருவீர்கள்; இதற்கு 'கஸ்டமைஸ்டு பிக்சர் புக்' என்று பெயர். புதுமையான இந்த கருத்துக்கு வடிவம் கொடுத்திருப்பவர் லக்ஷ்மி மிட்டர்.
“என் மகனுக்கு தினமும் விதவிதமாக கதைச் சொல்லத் தொடங்கிய பிறகுதான், எனக்கு நல்லா கதைச் சொல்லத் தெரிகிறது என்ற விஷயத்தையே புரிந்துகொண்டேன்” என்கிறார் 38 வயதான லக்ஷ்மி மிட்டர். தற்போது சென்னையில் வசித்து வரும் லக்ஷ்மி, பொருளாதாரம் மற்றும் மேலாண்மை ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர், குழந்தைகளுக்கு எழுதுகிறார். அவரிடம் பேசினோம்:
குழந்தைகளையே பாத்திரமாக்கி எழுதும் முறையால் என்ன பயன்?
“ஆன்ட்டி என்னைப் பத்தி ஒரு கதை எழுதுங்க”ன்னு என் பையனோட நண்பன் கேட்டான். உடனே சரின்னு விளையாட்டா சொன்ன விஷயத்தை ரொம்ப மெனக்கெட்டு, படங்கள் வரைஞ்சு எழுதிக் கொடுத்தேன். அவனோட பெயரைப் பார்த்ததும், அவன் வேறு ஓர் உலகத்துக்குப் போயிட்டான். குழந்தைகளுக்கு அவங்க பெயரை புத்தகத்துல பார்த்ததும் வர்ற மகிழ்ச்சி இருக்கே, அதுக்கு விலையே கிடையாது. எனக்கு அவ்வளவு நிறைவா இருந்தது.
ஒரு குழந்தைக்கிட்ட நான் பார்த்த இந்த சந்தோஷத்தை, அப்படியே பலமடங்காக்க நினைச்சேன். இதை வேலையா எடுத்துச் செய்யத் தொடங்கியிருக்கேன். குழந்தைகளோட உண்மைப் பெயர், சம்பவத்தை வச்சு எழுத ஆரம்பிச்சு ஏழு புத்தகங்கள் எழுதியாச்சு.”
கதை யாரோடது?
“பெற்றோர்கள் குடும்பத்தில் நடக்கும் சுவாரசியமான சம்பவங்களை என்னிடம் சொல்வாங்க. அதேமாதிரி குழந்தைகளும், இந்தக் கலர் டிரஸ் வேணும், நான் இப்படி இருக்கணும்னு சொல்வாங்க. இவங்க சொன்னதை உள்வாங்கிட்டு அதிலேருந்து கதையையும், ஓவியத்தையும் உருவாக்குவேன். முன்னாடி ஒரு மாதமாகும். இப்பலாம் ஒரே வாரம் போதும்.”
குழந்தைங்க கூச்சப்படாம உங்ககிட்ட பேசுவாங்களா?
“கண்டிப்பா இல்ல. ஏதாவது பேச்சு கொடுத்தாலே, ஓடிப்போயிடுவாங்க. குழந்தைங்ககிட்ட ஃபிரண்ட்ஸ் ஆகிறது ரொம்ப கஷ்டம். எட்டாவதுக்கு மேல படிக்கறவங்க தயக்கப்படாம பேசறாங்க. ஆனா சின்னப் பசங்க நிறைய வெட்கப்படறாங்க. சமீபத்துல ஓர் அம்மா அவங்க பையன் பைலட் ஆகணும்ன்னு சொல்றான், அதை வச்சு கதை எழுதச் சொன்னாங்க. அவங்கப் பையன்கிட்ட நான் ஏதாச்சும் கேட்க போனாலே ஓடிப்போய் ஒளிஞ்சுப்பான். “ஒயிட் கலர் டிரஸ், ப்ளூ கலர் ஸ்ட்ரைப்ஸ் போட்டு இருக்கிற மாதிரி வரையுங்க”ன்னு சொன்னான். அவன் ஆசைப்பட்ட மாதிரியே வரைஞ்சு புத்தகத்தைக் கொடுத்தேன். அவ்வளவுதான், இப்போ நானும் அவனுக்கு ஃபிரண்டு ஆகிட்டேன்.”
இந்தப் புத்தகங்கள் கடைகளில கிடைக்குமா?
“இது ஒரு குடும்பத்தோட தனிப்பட்ட கதை. அவங்க பெயர், அவங்க குடும்பத்துல நடந்த சம்பவங்கள். இதற்கு கதை, ஓவியங்கள் மூலமா நான் உயிர் கொடுத்திருக்கேன். ஆனா இதை என்னால சொந்தமாக்கிக்க முடியாது. நான் எழுதி, புத்தகமா கொடுத்திடுவேன். அதுக்கு அப்பறம் அது அவங்களோட முழுப் பொறுப்பு.
யார்கிட்டையும் இந்தப் புத்தகம் கிடைக்காது, நீங்களும் இதை விற்க முடியாது, அப்ப இந்தப் புத்தகம் எழுதறதுக்கு என்ன காரணம்?
“நாம ரொம்ப வேகமா ஓடிட்டு இருக்கோம், சில முக்கியத் தருணங்கள் நமக்கு நினைவுல இருக்கறதே கிடையாது. அப்படியான தருணங்களை மறக்காம பொக்கிஷமா, இந்தப் புத்தகத்துல இருக்கும். அந்த மனிதர்கள் இல்லைன்னாலும், அவங்களோட நினைவுகள் என்றும் தொடர மாதிரியான ஓர் உணர்வு வரும். அப்ப கண்டிப்பா, குழந்தைங்க என்னை நினைப்பாங்க. அதுதான் என்னோட வெற்றியா நான் நினைக்கிறேன்.”

