
“எங்களுக்கு வழிகாட்டி எங்கள் தாத்தா இனியவன் நடத்தும் 'இலக்கிய வீதி' அமைப்பு. அதில் எண்ணற்ற இளைஞர்களை இனங்கண்டு, அவர்களுடைய எழுத்துத் திறனுக்கு பல ஆண்டுகளாக அங்கீகாரம் அளித்து வருகிறார். அதைப்போலவே, இன்றைய இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக நிகழ்ச்சிகளை நடத்தவேண்டும் என்று நினைத்தோம். அப்படி உருவானதுதான் 'இலக்கு' என்ற அமைப்பு” என்று பேசத் தொடங்கினர் 21 வயது யாழினியும் அவரது அண்ணன் சிபிநாராயணனும்.
“இலக்கு மூலம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நுண்கலைப் பயிற்சிகள், மேலாண்மைப் பயிற்சிகளை நடத்தி வந்தோம். அப்போது, தனியார் பள்ளிகளில் வாரம் ஒருநாள் பயிற்சி நடத்த அனுமதி கேட்போம். அப்படித்தான் எங்கள் முயற்சி தொடங்கியது. பின்னர், வெளிச்சத்திற்கு வராத இளைஞர்களைத் தேடி, அவர்களுடைய சாதனைகளின் உண்மைத் தன்மையை உணர்ந்து, பரிசு கொடுக்க ஆரம்பித்தோம்.
ஒவ்வோராண்டும் குறிப்பிட்ட நோக்கத்தை முன்வைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், சாதித்த இளைஞர்களுக்குப் பரிசுகள் வழங்க ஆரம்பித்தோம். 'முயற்சியே உன் முகவரி', 'சிகரம் நம் சிம்மாசனம்', 'தோள்கள் நமது தொழிற்சாலை' என ஒவ்வோராண்டும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை முன்வைத்து மாதாமாதம் இளைஞர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவோம்.
கடந்த ஆண்டு இயற்கை விவசாயம், இயற்கை உணவு, மதிப்புக் கூட்டு விவசாயம் என 12 தலைப்புகளைத் தேர்வு செய்து, ஒவ்வொரு மாதத்திலும், அந்தந்தத் துறையில் சிறப்பாகச் செயல்படும் இளைஞரைத் தேர்வு செய்து விருது கொடுத்தோம். இவர்கள் தான் நாளைய சமூகத்தின் முன்மாதிரிகள். அவர்களுடைய சாதனையை அங்கீகரித்தால் தான், மேன்மேலும் ஊக்கம் கிடைத்து இன்னும் பல நல்ல விஷயங்களை செய்வார்கள்.
ஓய்வு நேரம் கிடைக்கும்போதெல்லாம், பல துறைகளில் சாதிக்கும் இளைஞர்களைத் தேடி கண்டுபிடித்து அவர்களை 'இலக்கு' அமைப்புக்கு அழைத்துவருவோம்.
நாணயவியல், ஊடகம், மருத்துவம், விளையாட்டு, மாற்றுத்திறனாளிகள், விவசாயம், உணவு, அறிவியல் தொழில்நுட்பம் என பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் இளைஞர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு அங்கீகாரம் வழங்குகிறோம்.
மேலும், தன்னம்பிக்கை, வேலைவாய்ப்பு, வேறு ஏதாவது துறையில் பயிற்சி தேவைப்பட்டால் அணுகும் இளைஞர்களுக்கு சரியான வழிகாட்டியாகவும் எங்கள் அமைப்பு செயற்பட்டு வருகிறது. மற்றவர்களுடைய சாதனைகளை உயர்த்திப் பிடிப்பதே எங்கள் நோக்கம்.”

