PUBLISHED ON : நவ 12, 2018

சானியா மிர்சா
ஹைதராபாத், தெலங்கானா
15.11.1986
உயரக் குறைவைக் காரணம் காட்டி, டென்னிஸ் கற்றுத்தர இவரது பயிற்சியாளர் ஆரம்பத்தில் தயங்கினார். ஆனால், நடந்தது வேறு! ஒரு மாதப் பயிற்சியிலேயே தான் ஒரு சிறந்த வீராங்கனை என்பதைப் பயிற்சியாளருக்கு உணர்த்தினார். 'எதிரிகள் பலமாக இருந்தால்தான் தோல்வி அடைந்தாலும் நம்முடைய முழுத் திறமையை உணர முடியும்' என்று சொல்லும் இவருக்கு, சவால்கள் மிகவும் பிடிக்கும். இதனால்தான் ஆறு வயதில் டென்னிஸ் விளையாட ஆரம்பித்து 29வது வயதில் (இரட்டையர் பிரிவில்) நம்பர் ஒன் ஆனார் சானியா மிர்சா!
அவரது அப்பாதான் ஆரம்பகாலப் பயிற்சியாளர். வகுப்பில் இருந்த நேரத்தைவிட டென்னிஸ் விளையாடிய நேரம் அதிகம், என்றாலும் படிப்பிலும் அவர் தான் வெற்றியாளர். தந்தையின் பொருளாதார நிலையைப் புரிந்துகொண்டு, கல்வி உதவித்தொகை பெறுவதற்காகவே நன்கு படித்தார். 12 வயதில் அவரது விருப்பம் நிறைவேறி, முழுநேரப் பணியாக டென்னிஸ் விளையாடத் தொடங்கினார்.
தன்னைவிட முன்னணியில் இருக்கும் வீரர்களை வெல்வதே சானியாவின் குறிக்கோள். இதற்காகவே சிறுவயது முதலே அதிரடியாக விளையாடுவார்.
8 வயதில், தன்னைவிட மூத்த பெண்ணைத் தோற்கடித்துப் போட்டியில் வென்றார்.
16 வயதில், இளம்பெண்கள் இரட்டையர் பிரிவில், விம்பிள்டன் பட்டம் வென்றபோது, ஒட்டுமொத்த டென்னிஸ் உலகின் கவனமும் இவர் மீது குவிந்தது.
உள்நாடு மட்டுமன்றி பல சர்வதேசப் போட்டிகளிலும் வென்று, முன்னணி வீராங்கனையாக முன்னேறினார். 2004இல் முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று, ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் நாட்டின் தலைசிறந்த டென்னிஸ் வீராங்கனையாக இருந்தார்.
பல தடைகளைக் கடந்து டென்னிஸில் இந்தியாவைத் தலை நிமிரச் செய்த இந்த 'இந்தியாவின் மகள்', தற்போது தெலங்கானாவில் டென்னிஸ் அகாதெமி நடத்தி வருகிறார்.
விருதுகள்
2004 அர்ஜுனா
2006 பத்ம ஸ்ரீ
2015 ராஜிவ் காந்தி கேல் ரத்னா
2016 பத்ம பூஷண்
