PUBLISHED ON : ஜூன் 10, 2019

உடுப்பது உடையானது போல், கொடுப்பது கொடையாயிற்று. மக்கட் பிறவியின் பயன் பிறருக்குக் கொடுத்து வாழ்வதே. இதனை இலக்கியங்கள் ஏதேனும் ஒரு கருப்பொருளைக்கொண்டு காலந்தோறும் உணர்த்தி வந்திருக்கின்றன.
அவ்வகையில் சிறுபஞ்சமூலம் கூறும் நெறி என்னவென்று பார்க்கலாம்.
மக்களின் நீர்த் தேவையை நிறைவு செய்யும் வகையில் குளம் வெட்ட வேண்டும். வெயில் தாக்காதபடி, செடிகளை நட்டு மரமாக்கி, நிழற்பாதை அமைக்க வேண்டும். கரடுமுரடான பாதையைச் சீராக்கி, போக்குவரத்தைச் சீர்செய்ய வேண்டும். தரிசு நிலத்தை உழுது, விளைநிலமாக்க வேண்டும். ஊருக்குள் வாழும் மக்களின் தாகத்தைத் தீர்க்க, கிணறு வெட்ட வேண்டும். இந்த ஐந்து தொழிலையும் எவர் செய்கிறாரோ, அவர் சொர்க்கத்தை அடைவார் என்கிறது இந்நூலின் அறுபத்தாறாவது பாடல்.
'குளம்தொட்டுக் கோடு பதித்துவழி சீத்து
உளந்தொட்டு உழுவயல் ஆக்கி - வளந்தொட்டுப்
பாகுபடும் கிணற்றோடு என்றிவ்வைம் பாற்படுத்தான்
ஏகும் சுவர்க்கத்து இனிது'
மானிடருக்கு மூன்று பக்கம் படிக்கட்டுகள், கால்நடைகளுக்கு ஒரு பக்கம் சரிவான பாதை அமைத்து குளம் வெட்டுவதுண்டு. அடுத்த தலைமுறை நீர்ப்பஞ்சமின்றி வாழ, மரங்களை நட்டு, குளங்களைச் சீரமைப்பது அவசியம்.
- எம்.ஏ. கிருஷ்ணகுமார்

