PUBLISHED ON : ஜூன் 10, 2019

மீன்கள் வளர்க்க ஆசைப்படுபவர்கள், அந்தந்த சீசன்களில் பிரபலமாக உள்ள மீன்களைத்தான் வாங்கி வளர்ப்பார்கள். சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த பீட்டா மகத்வராஜ், இதில் வேறுபட்டவர். இந்திய மீன்களை மட்டும் பிரத்யேகமாக வாங்கி வளர்த்து வருகிறார். அவரிடம் மீன்கள் குறித்துப் பேசினோம்.
மீன் வளர்க்கும் ஆசை எப்படி வந்தது?
நாங்க, கேரளத்திலிருந்து சென்னைக்கு இடம்பெயர்ந்து வந்தவங்க. ஏழு வயதிலிருந்து மீன்களை வளர்த்து வருகிறேன். நீருக்குள் ஓர் உயிர் வாழ்கிறது என்பதே எனக்குப் பெரிய ஆச்சரியம். அதைப் புரிஞ்சுக்க நினைச்சுத்தான் மீன் வளர்க்க ஆரம்பிச்சேன்.
இந்திய மீன்களை மட்டும் வளர்க்கிறீர்களே? என்ன காரணம்?
இந்திய மீன்கள் பற்றி நிறையப் பேருக்குத் தெரியாது. நம் தமிழகத்தைச் சேர்ந்த மீன்களைப் பற்றிக்கூட குறிப்புகளோ, படங்களோ கிடையாது. அதைப் பற்றித் தெரிஞ்சுக்கவும், அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவும் முயற்சி பண்ணிக்கிட்டிருக்கேன்.
அப்படியென்ன வித்தியாசமான மீன்கள் வெச்சிருக்கீங்க?
Carinotetraodon Travancoricus, Dawkinsia rubrotinctus, Channa stewartii, Sahyadria denisonii, Channa barca, Pterophyllum altum போன்ற பல வகை இந்திய மீன்களை வைத்திருக்கிறேன்.
எப்படி மீன்களைச் சேகரிக்கிறீங்க?
பயணங்கள் மூலமாத்தான். தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவில் பல இடங்களுக்குப் போவேன். அங்கு நீர்நிலைகளில் இருக்கும் மீன்கள் பத்தி தெரிஞ்சுக்கிட்டு, புகைப்படம் எடுப்பேன். அந்த மீன்கள் சிலவற்றை வாங்கிட்டு வருவேன். எந்த மீன்கள் வித்தியாசமாக இருக்கிறதோ, அதைப் பற்றி தெரிஞ்சிக்கிட்டு அதை வாங்குவேன். இப்படி என்கிட்ட தமிழகம், கர்நாடகம், கேரளம், வடகிழக்குப்பகுதி மாநிலங்களைச் சேர்ந்த மீன்கள் இருக்கு.
இத்தனை வகையான மீன்களை எப்படிப் பராமரிக்கிறீங்க?
பராமரிப்பது சுலபமில்ல. சில மீன்களுக்குத் தண்ணீரோட வெப்பநிலை மாறும். சிலதுக்கு தொட்டியில் விட்டா பிடிக்காது. வழக்கமான மீன் உணவுகளைக் கொடுக்க முடியாது. எந்தெந்த மீன்களுக்கு என்னென்ன தேவைன்னு தெரிஞ்சுக்கிட்டு பராமரிச்சுக்கிட்டு வர்றேன். இப்போ டெக்னாலஜி மூலம் நீரோட வெப்பநிலையைக் கூட்டவும் குறைக்கவும் முடியும்.
உங்கள் குடும்பத்தினர் உங்களது ஆர்வத்தை ஆதரிக்கிறாங்களா?
நிச்சயமா ஆதரிக்கிறாங்க. நான் ஊருக்குப் போகும்போது, முன்னதாகவே, எந்தெந்த மீன்களுக்கு என்னென்ன உணவுன்னு தெளிவா எழுதி வெச்சுடுவேன். என்னோட அம்மாதான் எல்லா மீன்களுக்கும் உணவு கொடுப்பாங்க.

