PUBLISHED ON : ஜூன் 10, 2019

கேரளத்தை 'கடவுளின் தேசம்' (God's own country) என்று அழைப்பார்கள். அதற்குக் காரணம், அரபிக் கடல் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் நடுவே அழகிய தோற்றத்துடன் பச்சைப்பசேலென்று செழிப்பாக அமைந்துள்ளதுதான். ஏராளமான சுற்றுலா பகுதிகள், காடுகள், மலைகள், அருவிகள், நீரோடைகள், நதிகள் என, இந்தியாவின் பேரழகு மாநிலமாகத் திகழ்கிறது.
கேரளம் முழுவதும் நீர்வழிப் போக்குவரத்து நடைபெறுகிறது. நீர்நிலைகளால், அங்குள்ள மக்களின் முக்கிய போக்குவரத்தாக படகுகள் உள்ளன. இந்த இரசனையின் தொடர்ச்சியாகத்தான் படகு வீடுகள் உருவாகின. ஒரு காலத்தில் இத்தகைய படகு வீடுகள் அரிசி மற்றும் நறுமணப் பொருட்கள் டன் கணக்கில் ஏற்றிச் செல்லப் பயன்பட்டு இருக்கின்றன. தற்போதுள்ள படகு வீடுகள் பலா மரக்கட்டைகளால் செய்யப்பட்டு, தென்னை நாரினால் ஒன்றாக இணைக்கப்பட்டு வீடுகளாகக் கட்டப்பட்டுள்ளன.
சுற்றுலா பயணிகளைக் கவர, அலங்கரிக்கப்பட்ட படுக்கையறைகள், நவீன கழிப்பறைகள், வரவேற்பறைகள், சமையலறை, பால்கனி என, பிரமாண்ட வீடு போலக் காட்சியளிக்கிறது. நம்மை ஏற்றிக்கொண்டு நகரும் இந்தப் படகு வீடு, பரந்து விரிந்த நீர்ப் பின்புலன் (Back water) பகுதியில் சுற்றி வருகிறது. இதில் உலா வந்தபடி இயற்கை அழகையும் கேரள ஊர்களையும் பார்க்கலாம். அங்கே நிலவும் அமைதியான சூழலும் சுற்றிக் காணப்படும் தென்னை மரங்களும் மனத்துக்குப் பரவசத்தைத் தருகின்றன.
கேரள மீன் உணவுகளுக்கென ஒரு தனிச்சுவை இருக்கிறது. படகிலேயே சாப்பாடும் தயாராகிறது. நீரின் நடுவே இருக்கும் கடைகளில் நாம் வாங்கித் தருகிற மீனை, சுடச்சுட சமைத்துக் கொடுக்கிறார்கள். அது தவிர, மளிகைக் கடை, இறைச்சிக் கடை, ஐஸ்க்ரீம் கடை தனித்தனிப் படகுகளையும் பார்க்க முடிகிறது.
சிறிய நாட்டுப்படகுகள், பயணிகள் மோட்டார் படகுகள், ஆடம்பரப் படகுகள் என, ஆலப்புழா முழுக்கப் படகுகளைப் பார்க்க முடிகிறது. சாலையைப் போல, நீர்வழிப்போக்குவரத்திலும் விதிகள் உண்டு. இத்தாலிக்கு ஒரு வெனிஸ் நகரம் போல் 'கீழை நாடுகளின் வெனிஸ்' (East Venice) ஆக ஆலப்புழா அமைந்திருக்கிறது. மதியம் 12 மணிக்கு படகு வீட்டுக்குள் நுழைந்தால், மறுநாள் காலை 9 மணிக்கு வெளியேறலாம். தண்ணீர் தாலாட்டும் இந்தப் புதுமையான அனுபவம், உங்கள் வாழ்வை மலர்ச்சியாக்குவது உறுதி.

