PUBLISHED ON : ஜூன் 18, 2018

காற்றில் பலவிதமான வாயுக்கள் கலந்துள்ளன. ஆனால் நாம் ஆக்சிஜனை மட்டுமே சுவாசிக்கிறோம். இது எப்படி நடக்கிறது?
காற்றில், நைட்ரஜன் 78.08 சதவீதமும், ஆக்சிஜன் 20.95 சதவீதமும் உள்ளன. இவை தவிர ஆர்கான், கார்பன் டை ஆக்சைடு, நியான், ஹீலியம், மீத்தேன், கிரிப்டான், நைட்ரஜன் ஆக்சைடு, ஹைட்ரஜன், ஜெனான், ஓசோன் ஆகிய வாயுக்களும் காற்றில் கலந்திருக்கின்றன.
அதுமட்டுமல்ல, நீராவியும், தூசு தும்புகளும், மாசுபாடுகளும் கலந்திருக்கின்றன. இவை மட்டும் இடத்துக்கு இடம் மாறுபடும்.
நாம் சுவாசிக்கும் காற்று மூச்சுக் குழாய் வழியே நுரையீரலை அடைகிறது. நுரையீரலில் மரங்களின் வேர் போல விரிந்திருக்கும் மிகமிக நுண்ணிய குழாய்களை காற்று அடைந்ததும், அங்கு வேதியியல் மாற்றத்தால் ஆக்சிஜன் மட்டும் சிறிதளவு நம் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினுடன் கலக்கிறது. பிறகு, ஆக்சிஜன் தோய்ந்த ரத்தம் உடலெங்கும் உள்ள செல்களுக்கு அனுப்பப்படுகிறது.
காற்றில் அதிகமாக உள்ள நைட்ரஜன், உடலில் எதனுடனும் வினைபுரியாத தன்மை உடையது. எனவே, எந்த அளவுக்கு நைட்ரஜன் நம் சுவாசத்தில் உள்ளே போகிறதோ, அதே அளவு வெளிமூச்சு வழியே வெளியேறுகிறது. இதைத்தவிர கார்பன் டை ஆக்சைடும் வெளியேற்றப்படுகிறது.
- கிரிதரன்
