PUBLISHED ON : நவ 05, 2018

கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு போன்ற வாயுக்கள், பசுமை இல்ல வாயுக்கள் (Greenhouse gas) என்று அழைக்கப்படுகின்றன. இவை பூமியில் இருந்து வெளியாகும் வெப்பத்தை, புவிமண்டலத்தைக் கடந்து போகாமல் தடுக்கின்றன.
இந்த வாயுக்களின் அளவு கட்டுப்பாடில்லாமல் அதிகரிக்கும்போது, பூமியின் வெப்பநிலையும் கூடுகிறது. இதையே புவி வெப்பமயமாதல் என்கிறோம். இச்சூழலில் துருவப் பரப்பில் இருக்கும் பனிக்கட்டிகள் உருகி, அதன் மூலம் கடல் நீர்மட்டம் அதிகரிக்கும்.
பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லாரா (Laure Resplandy) குழுவினர் வெளியிட்டுள்ள ஆராய்ச்சி முடிவுகள், அச்சுறுத்துவதாக உள்ளன. கடந்த 25 ஆண்டுகளில் உலகம் முழுவதும் மின்சாரம் தயாரிக்கப் பயன்படுத்தியதைப் போல, 150 மடங்கு ஆற்றலை வெப்பமாக நாம் கடலில் கலந்துள்ளோம். அதாவது ஏற்கெனவே செய்த மதிப்பீடுகளைவிட 60 சதவீதம் அதிகமான வெப்பம் கடல் பரப்பால் உறிஞ்சப்படுகிறது.
கடல் உறிஞ்சுவதால் வரும் அதிக வெப்பம், உலகின் சுற்றுச்சூழலுக்கு பெருத்த அபாயமாக அமையும் என்றும் அந்த ஆய்வறிக்கை எச்சரிக்கிறது. உடனடியாகப் பசுமை இல்ல வாயுக்கள் வெளியீட்டை முடிந்த அளவு குறைப்பது, வன அழிப்புகளை குறைப்பது, அதிக மரங்கள் வளர்ப்பது, குப்பைகளை மறுசுழற்சி செய்வது, மின் சிக்கனம், மரபு சாரா எரிசக்தி பயன்பாட்டை அதிகரிப்பது போன்றவற்றைத் துரிதப்படுத்துவதன் மூலமே, இந்த அபாயத்தைக் கடக்க முடியும் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
