PUBLISHED ON : ஏப் 01, 2019

மடிப்பு நுண்நோக்கியைத் தமிழகம் எங்கும் எடுத்துச் செல்லும் மோ. பாண்டியராஜனிடம் பேசினோம்.
“2014ஆம் ஆண்டு ஏப்ரலில் கண்டுபிடிச்சதுதான் மடிப்பு நுண்ணோக்கி (foldscope).
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், நாடு முழுவதும் துளிர் இல்லம் நடத்திட்டு வருது. அதில் மடிப்பு நுண்ணோக்கியை எப்படி பயன்படுத்தணும்னு பயிற்சிகளை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கற்றுக்கொடுத்தாங்க. இப்படித்தான் எங்க துளிர் இல்லமான மதுரை, ஈடன் சைன்ஸ் கிளப்பிற்கு மடிப்பு நுண்ணோக்கி வந்துச்சு.
துளிர் இல்லம் சார்பாக, வட தமிழகத்திற்கு சென்னையிலேயும்; தென் தமிழகத்துக்கு மதுரையிலேயும் பயிற்சிப் பட்டறைகளை நடத்தினோம். அதில் முதல் முறையா மடிப்பு நுண்ணோக்கியில் எடுக்கப்பட்ட படங்களை வச்சு, கண்காட்சி நடத்தினோம்.
கடந்த 3 ஆண்டுகளில் இதுவரை சுமார் 500க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இது பற்றி பயிற்சி கொடுத்திருக்கிறேன். மாணவர்கள் ஆசிரியர்கள் என ஒரு லட்சம் பேரைச் சந்தித்திருப்பேன். அதுபோலவே, திருவாரூர் மாவட்டத்தில் அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த ஆசிரியர் இராமமூர்த்தி இதுவரை 150க்கும் மேற்பட்ட மலர்களின் மகரந்தங்களைப் படம் பிடிச்சிருக்கிறார்.
நாகை மாவட்டத்தில் இருக்கும் ஆசிரியர் மணதுணைநாதன், அப்பகுதியில் உள்ள சிறிய கிராமங்களுக்கும் சென்று அங்கிருக்கும் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்களிடம், மடிப்பு நுண்ணோக்கியை அறிமுகப்படுத்தி வருகிறார்.
அறிவியலில் நுண்நோக்கிக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. எல்லாத்தையும் பாடமாக மட்டுமே படிக்காமல், நுண்நோக்கியில் வெச்சுப் பார்க்கும்போது, பெரிய ஆச்சரியம் ஏற்படும். நுண்நோக்கியைக் கையடக்கமாகக் கொடுக்கும்போது, ஒவ்வொரு மாணவனுமே அறிவியல் ஆய்வாளனாக ஆகிடறான்.
மாணவர்களுக்குள் இருக்கும் அறிவியல் ஆர்வத்தை, கத்துக்கணுங்கற வேகத்தை மடிப்பு நுண்நோக்கி அதிகப்படுத்தி இருக்கு.
உங்களுக்கும் மடிப்பு நுண்நோக்கி வேண்டுமென்றால் இங்கே பதிவு செய்யுங்க: http://www.dbtindia.nic.in/microscopy-for-all-dbt/. என்னை அழைக்கும் பள்ளிகளுக்கும் சென்று, பயிற்சி அளித்து வருகிறேன்” என்று கூறினார்
மோ. பாண்டியராஜன். இவரது மின்னஞ்சல் முகவரி:mopatnsf@gmail.com
கையடக்க நுண்நோக்கி ரெடி!
நம் சாதாரணக் கண்களுக்குப் புலப்படாத நுண் உயிரிகளான பாக்டீரியா, வைரஸுகள், அமீபாக்கள் போன்றவற்றை பெரியதாகக் காட்டக்கூடிய கருவிதான் நுண்ணோக்கி (Microscope). அளவில் பெரியதான அதன் விலையும் அதிகம். அதைப் போலவே செயற்படும் ஒரு கருவிதான் மடிப்பு நுண்ணோக்கி (Foldscope).
இது காகிதத்தாளில் ஒரிகாமி போல செய்யக்கூடியது. தாளைவிட, கொஞ்சம் கெட்டி அட்டை போன்ற தாளில் இது வரையப்பட்டிருக்கும். வெட்டி எடுப்பதற்கும் வழி செய்யப்பட்டிருக்கும். அதன்படி பிரித்து, மடித்து, இக்கருவியை உருவாக்கிவிடலாம். இதன் நடுவில் பொருத்துவதற்கு சின்னதாக ஒரு லென்ஸும் கொடுக்கப்படுகிறது. கீழே போட்டாலும், ஏறி மிதித்தாலும் உடையாது.
இதனை உருவாக்கியவர்கள் தற்போது அமெரிக்காவில் வசிக்கும் பேராசிரியர் மனு பிரகாஷ் என்பவரும் அவருடைய மாணவரான ஜும் சைபல்ஸ்கி (Jim Cybulski) என்பவரும்தான்.
தண்ணீரில் இருக்கும் பாக்டீரியாக்கள் தொடங்கி மனித இரத்தத்தில் உள்ள
சிவப்பு அணுக்கள் வரை மடிப்பு நுண்ணோக்கி மூலம் 32 வகையான பொருட்களை
பெரிதாகப் பார்க்கமுடியும்.
ஆப்பிரிக்க கண்டத்தில் வறுமையில் இருக்கும் பல நாடுகளில் மடிப்பு நுண்ணோக்கியை மருத்துவப் பரிசோதனைக்கும் பயன்படுத்துகின்றனர்.
தமிழகம் முழுவதும் லட்சம் மாணவர்களிடம் மடிப்பு நுண்ணோக்கிஅறிமுகமாகியுள்ளது. இதற்குக் காரணம் துளிர் இல்லத்தின் ஈடன் சைன்ஸ் கிளப்.

