PUBLISHED ON : ஏப் 04, 2016
இப்போது நாம் பயன்படுத்தும் தீப்பெட்டியின் ஆரம்ப வடிவத்தைக் கண்டுபிடித்தவர், 'ஜான் வாக்கர்' (John Walker) என்ற ஆங்கிலேயர். உலகத்தில் பல விஷயங்கள் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டவை. இதுவும் ஒரு தற்செயல் கண்டுபிடிப்புதான்.
ஜான்வாக்கர், வேட்டையாடுவதில் விருப்பம் கொண்டவர். தன் துப்பாக்கியில் விரைவாகத் தீப்பற்ற வைக்க வேண்டும் என்ற ஆய்வு முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அதற்காகப் பொட்டாஷ் (Potash), ஆன்டிமோனி (Antimony) இரண்டையும் ஒரு குச்சியில் குழைத்துப் பூசினார். அப்போது அவரது பாக்கெட்டில் இருந்த சிறு இரும்புக் குண்டு தவறி விழுந்தது. அந்த இரும்புக்குண்டு உரசியதும் தீப்பிடித்து எரிந்தது! இதைக் கண்டதும், இது போன்று பல குச்சிகளில் பொட்டாஷையும் ஆன்டிமோனியையும் குழைத்துப் பூசி, வேட்டைக்குச் செல்லும்போது மிருகங்கள், பறவைகள் நடமாடும் இடங்களில் ஊன்றி வைத்தார். அந்த இடத்தைக் கடந்து சென்ற விலங்குகள், பறவைகளின் உடல்களில் இந்த குச்சிகள் உரசியதில் தீப்பிடித்துக் கொண்டதாம்.
வாக்கர் கண்டுபிடித்தது, வெறும் குச்சியில் தீப்பிடிக்கும் முறையை மட்டும்தான். அது எதில் உரசினாலும் தீப்பிடித்தது. அதனால் அப்போது அந்தக் கண்டுபிடிப்பைப் பலரும் எதிர்த்தார்கள்.
ஸ்வீடனைச் சேர்ந்த 'கஷ்டஃப் எரிக் பாஷ்க்' (Gustaf Eric Pasch) என்பவர், பாஸ்பரஸை (Phosphorus) ஓர் இடத்தில் தடவி, குச்சியை அந்த இடத்தில் தேய்த்தால் தீப்பிடிக்கச் செய்யலாம் என்பதை 1852ல் கண்டறிந்தார்.
அந்தக் கண்டுபிடிப்பை மேலும் செம்மைப்படுத்தி, ஒரு பெட்டியின் இரு புறங்களிலும் பாஸ்பரஸ் தடவி, அதில் உரசினால் மட்டுமே தீப்பிடிக்கும் வகையில் பாதுகாப்பான முறையை 'ஜோஹன் எட்வர்ட் லண்ட்ஸ்ட்ராம்' (Johan Edvard Lundstrom) என்பவர் கண்டுபிடித்தார். இன்றைய 'சேப்டி மேட்ச்' (Safety Match) எனப்படும் தீப்பெட்டியை உருவாக்கியவர் இவரே.

