கவனம்: சுற்றுச்சூழல்
உலகம் முழுவதிலும் இயற்கை வளங்கள் பாதிக்குமேல் நம் சுயநலத்தால் அழிக்கப்பட்டுவிட்டன. சுரங்கம் அமைத்தல், தொழிற்சாலை அமைத்தல். கட்டடங்கள் கட்டுதல் என, பல காரணங்களுக்காக வளங்களை அழித்து வருகிறோம். மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த, இயற்கை வளங்களை அழிப்பதுதான் தீர்வு என, பலரும் நினைக்கிறோம்.
இந்தியாவில் பிரிட்டிஷார் பெருவாரியான வளங்களைச் சுரண்டிக் கொண்டிருந்தனர். இதுபற்றிக் காந்தி மிகவும் வேதனைப்பட்டார். இதுபற்றிக் காந்தியிடம் கேட்டபோது, “பூமியின் பாதியளவு இயற்கை வளங்களை அழித்து, பிரிட்டன் நாடு செழிப்பாக மாறிவருகிறது. இந்தியா போல் இன்னும் எத்தனை நாடுகள் தேவைப்படும்?” என்றார்.
காந்தி, சமூக மாற்றத்தை விரும்பியவர் தான். ஆனால், அது மனிதனுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாதவாறு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
தொழிற்புரட்சிக்கு முன்னோடியாக இருந்த ஐரோப்பிய நாடுகளே, இன்று உண்மையைப் புரிந்துகொண்டுவிட்டன. இயற்கையை அழிக்கக்கூடாது என்று கருதுகின்றன. வாழ்க்கையை வேறு மாதிரி பார்க்கப் பழகி வருகின்றன.
அதாவது, தேவையான பொருட்களை மட்டுமே வாங்குவது, விவசாயம் செய்வது, சுற்றுச்சூழலுக்குப் பாதகம் வராத வேலைகள் செய்வது என, மாற்றுப் பாதைகளைத் தேர்வு செய்கின்றனர்.
இதையே தான் காந்தியும் சொல்லி இருக்கிறார். “மக்கள் மீண்டும் அமைதியைக் கொடுக்கும் வாழ்க்கைக்குத் திரும்பும் நிலை வரும்”, 'இயற்கையைவிட உத்வேகம் கொடுக்கும் விஷயங்கள் பூமியில் இல்லை. என்னுடைய மனத்தை மென்மையாக்க, இயற்கை ஒருபோதும் தவறியதில்லை” என்றார்.
அவர் சொன்னது இன்று நிஜமாகிறது. இந்தியாவில், பலரும் இயற்கை விவசாயம், தேவையான பொருட்களோடு மட்டுமே வாழ்வது என, காந்திய வழியில் வாழ்கின்றனர்.
கட்டுரைக்கு உதவிய நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள்:
Gandhi as human ecologist, John.S.Moolakkattu, Gandhi and the environment: Analyzing Gandhi's environmental thought, Mahatma Gandhi and environmental movements, Collected works of Mahatma Gandhi

