PUBLISHED ON : ஜன 06, 2025

இது மார்கழி மாதம். கோவில்கள், வீடுகள், தெருக்கள் எங்கும் திருப்பாவை பாடப்படுவதைக் கேட்டிருப்பீர்கள். 12 ஆழ்வார்களில் ஒரே பெண்ணான ஆண்டாள் எழுதிய இந்த 30 பாடல்களில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய அழகிய சொற்கள் பல உள்ளன. இங்கு சிலவற்றைக் காண்போமா?
பாசுரம் 1
திங்கள் - நிலவு, திங்கட்கிழமை என்று பொருள் உண்டு. ஆனால் இங்கு மாதம் என்ற பொருளில் வருகிறது. நிலவின் சுழற்சியை வைத்து மாதங்கள் கணக்கிடும் முறை உள்ளது. எனவே நிலவின் பெயரே மாதத்திற்கும் ஆகிவந்தது.
மதியம் - பகல் வேளையை மத்தியானம், மதியம் என்கிறோம். ஆனால் இங்கு இது நிலவைக் குறித்தது.
பாசுரம் 4
இதில் ஆழி என்னும் சொல், முதலில் கடலைக் குறித்து வந்தது. 'ஆழிபோல் மின்னி' எனுமிடத்தில் சக்கரம் என்ற பொருளில் வருகிறது.
பாசுரம் 15
'வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க வல்லானை', இதில் முதல் 'வல்லானை' என்பது 'வல் ஆனை' அதாவது வலிமையான யானையைக் குறித்தது. 'மாற்றழிக்க வல்லானை' என்பதில் வல்லவன் என்ற பொருளில் வந்தது.
பாசுரம் 17
முதற்சொல்லான அம்பரம் என்பது மனிதர் உடுத்தும் உடையைக் குறிக்கும். 'அம்பரம் ஊடறுத்து' என்ற இடத்தில் இதே சொல் பூமிக்கு ஆடையாக அமைந்த வானத்தைக் குறிக்கும்.