PUBLISHED ON : நவ 25, 2024
வினைச்சொற்கள், வினைமுற்றுகளாக முடியும்போது முக்காலங்களையும் உணர்த்தும். அவற்றைத் தெரிநிலை வினைமுற்றுகள் என்பார்கள். காலம் தெரிகின்ற நிலையில் அவை இருப்பதால் தெரிநிலை வினை முற்றுகள் என்ற பெயரைப் பெற்றன.
இறந்த காலத்தில் ஒரு வினைமுற்றைச் சொன்னால், அதன் நிகழ்கால வினைமுற்றையும் எதிர்கால வினைமுற்றையும் எளிதில் கூற முடியும்.
வந்தான் என்று ஒரு வினைமுற்றினை, இறந்த காலத்தில் கூறுகிறோம் எனக் கொள்வோம். அதன் நிகழ்கால, எதிர்கால வினைமுற்று வடிவத்தை நம்மால் எளிதில் கூற இயலும்.வருகிறான், வருவான் என்பன அவை.
வந்தது என்று அஃறிணை ஒருமையில் அமைந்தால் வருகிறது, வரும் என்று அமைப்போம்.முக்காலங்களிலும் அமைந்த வினைமுற்றுத் தொடர்களை, இந்தப் புதிர்களில் அமைப்போம். அவற்றில் ஒரு காலத்தைக் குறிப்பது விடுபட்டிருக்கும். அதனைக் கூறவேண்டும்.
அ) கூறினாள், கூறுகிறாள், __________.
ஆ) எடுத்தான், __________, எடுப்பான்.
இ) __________, அசைகிறது, அசையும்.
ஈ) பிடிபட்டான், பிடிபடுகிறான், __________.
உ) வந்தாயா? ___________? வருவாயா?
ஊ) பாடிவிட்டாள், பாடிவிடுகிறாள், ___________.
எ) ___________, சொல்கின்றார், சொல்வார்.
ஏ) மேய்ந்தன, ____________, மேயும்.
ஐ) _____________, பழக்குகிறான், பழக்குவான்.
- மகுடேசுவரன்
விடைகள்:
அ) கூறுவாள்
ஆ) எடுக்கிறான் / எடுக்கின்றான்
இ)அசைந்தது
ஈ) பிடிபடுவான்
உ) வருகிறாயா?
ஊ) பாடிவிடுவாள்
எ) சொன்னார்
ஏ) மேய்கின்றன
ஐ) பழக்கினான்