PUBLISHED ON : டிச 17, 2018

நா.பார்த்தசாரதி
18.12.1932 - 13.12.1987
நதிக்குடி, விருதுநகர்
தமிழாசிரியர், இதழாசிரியர், நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு என, பல துறை நூல்களை வெளியிட்டு இருக்கிறார். அதனுடன் இந்திய, உலக இலக்கியத்திற்கு நிகராகத் தமிழ் இலக்கியத் தரத்தை உயர்த்த 'தீபம்' என்கிற இதழையும் ஆரம்பித்தார். அதன் மூலம் எழுத்தாளர்கள், விமர்சகர்கள், வாசகர்கள் என்று பலரையும் ஈர்த்தார் நா.பா. என்கிற நா.பார்த்தசாரதி.
பள்ளிப் படிப்புக்குப் பிறகு, முறையாகத் தமிழ் கற்று, மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் பண்டிதர் பட்டமும் மாலை நேர வகுப்பில் சேர்ந்து தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். பாரதியார் தமிழாசிரியராகப் பணிபுரிந்த மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் சிறிது காலம் ஆசிரியராகப் பணிபுரியும் வாய்ப்பும் கிடைத்தது. பின்னர் பத்திரிகைப் பணியில் சேர்ந்து 'கல்கி' இதழின் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி என, பல புனைப்பெயர்களில் எழுதி பத்திரிகை உலகில் பிரபலமானார். அதன்பிறகு சொந்தமாக அவர் தொடங்கிய 'தீபம்' என்ற இலக்கிய இதழ், தமிழ் இலக்கியத்தில் மிக முக்கியமான ஒன்றானது.
செயற்கைத் தன்மை இல்லாமல் சமுதாயப் பிரச்னைகள், சுயமுன்னேற்றச் சிந்தனைகள், சமூக சீர்திருத்தக் கருத்துகள் பற்றி எழுத்தில் அதிகம் பேசினார். ஆபாசம், வன்முறை போன்றவற்றைத் தவிர்த்து, இலக்கியத்தில் தனக்கென தனித்த இடத்தைப் பிடித்தார். இவரது 'சமுதாய வீதி' என்கிற நாவலுக்கு 1971ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது.
இவ்வாறு தன் வாழ்நாள் முழுவதும் இலக்கிய உலகத்துக்கும், தன் வாசகர்களுக்கும் எழுத்தின் வழி நியாயமாக இருந்து என்றைக்கும் அணையாத தீப ஜோதியாக நா.பா. திகழ்கிறார்.
நாட்டுடைமை ஆக்கப்பட்ட இவரது நூல்களை இலவசமாகப் பெற இந்த QR Codeஐ ஸ்கேன் செய்யவும்.
