PUBLISHED ON : டிச 03, 2018

ஆர்.வெங்கட்ராமன்
4.12.1910 - 27.1.2009
பட்டுக்கோட்டை, தஞ்சாவூர்
நாடாளுமன்ற உறுப்பினர்; தொழில்துறை, தொழிலாளர் நலன், கூட்டுறவு, மின்துறை, போக்குவரத்து ஆகிய துறைகளின் அமைச்சர்; நிதியமைச்சர்; பாதுகாப்பு அமைச்சர்; குடியரசு துணைத் தலைவர்; நாட்டின் 8வது குடியரசுத் தலைவர் என, படிப்படியாக உயர்ந்து நாட்டின் முன்னேற்றத்துக்கு உழைத்தவர் ஆர்.வெங்கட்ராமன்.
பள்ளிப்படிப்பைச் சொந்த ஊரில் முடித்து, சென்னை லயோலா கல்லூரியில், பொருளாதாரத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதற்குப் பிறகு சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பையும் முடித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்டார்.
காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டதால், 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் பங்குபெற்று, சிறை சென்றார். விடுதலைக்குப் பிறகு காங்கிரஸின் தொழிலாளர் பிரிவில் சேர்ந்து பணியாற்றினார். தமிழகத்தில் பல தொழிற்சங்கங்களின் தலைவராக இருந்து, அவர்களது நலனுக்காகப் பாடுபட்டார்.
1957இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று, நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். ஆனாலும், இவரது தேவையை உணர்ந்த அப்போதைய முதல்வர் காமராஜர், தமிழக அமைச்சரவையில் இடம் கொடுத்து, பல துறைகளை நிர்வகிக்கும் வாய்ப்பையும் கொடுத்தார்.
பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தபோது, ஏவுகணைத் திட்டங்களைக் கொண்டுவந்ததுடன், அதற்கு ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பொறுப்பேற்கக் காரணமாகவும் இருந்தார். 1987இல் இந்தியாவின் 8வது குடியரசுத் தலைவர் ஆனார். அவரது பதவிக் காலத்தில் அரசியலில் ஏற்பட்ட பல மாற்றங்களைக் கடந்து, தனது பணியைச் செய்தார்.
வாழ்ந்த காலத்தில் தான் ஏற்றுக்கொண்ட பணிகள் அனைத்தையும் நடுநிலையுடன் செய்து, தேசத்தின் தலைசிறந்த குடிமகனாக வெங்கட்ராமன் இருந்தார் என்பதைக் காலம் நினைவில் வைத்திருக்கும்.
