PUBLISHED ON : மார் 12, 2018
* தமிழின் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சீவகசிந்தாமணி.
* ஐம்பெரும் காப்பியங்களில் முழுமையாகக் கிடைத்தவை மூன்று. சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி.
* விருத்தப்பா என்னும் பா வகையால் எழுதப்பட்ட முதல் காப்பியம் சீவகசிந்தாமணி.
* வடமொழியில் உள்ள சீவகன் என்னும் அரசனின் கதையைப் பின்பற்றித் தமிழில் பாடப்பட்டது இந்நூல்.
* சிந்தாமணி என்பதற்கு, 'ஒளி குன்றாத மணி' என்று பொருள்.
* இக்காப்பியத்தை இயற்றிய திருத்தக்க தேவர் சமண முனிவர். சோழர் குடியில் பிறந்த இவர், திருத்தகு முனிவர் என்றும் திருத்தகு மகாமுனிவர் என்றும் அழைக்கப் பெறுகிறார்.
* சமணத் துறவிகள் அறக்கருத்துகளை மட்டுமன்றி இல்லறச்சுவையையும் பாடமுடியும் என்பதை நிறுவும்பொருட்டு இந்நூலை இயற்றினார் திருத்தக்க தேவர்.
* திருத்தக்க தேவரை 'தமிழ்க் கவிஞர்களுள் சிற்றரசர்' என்று வீரமாமுனிவர் பாராட்டியுள்ளார்.
* சீவகசிந்தாமணிக்கு முன் 'நரி விருத்தம்' என்னும் சிறு நூலை திருத்தக்க தேவர் இயற்றியுள்ளார்.
* இந்நூல், பதின்மூன்று பகுதிகளாகப் பிரித்து எழுதப்பட்டது. அந்தப் பிரிவுகளுக்கு இலம்பகம் எனப் பெயர்.
* முத்தி இலம்பகம் தவிர்த்து மற்ற இலம்பகங்கள், பெண்களின் பெயரில் அமைந்துள்ளன. பெரும்பாலான இலம்பகங்களில், திருமண நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
* சீவகசிந்தாமணி 3,145 பாடல்களைக் கொண்டது.
* இக்கதையின் நாயகன் சீவகன், எட்டுப் பெண்களை மணந்தான். அதனால் இந்நூலுக்கும் மணநூல் என்ற பெயரும் உண்டு.
- நிலவரசன்

