
'ஸ்டார்ட்' என்று சொன்னால், ஸ்நேகாவின் காதில் விழாது. சக போட்டியாளர் தண்ணீரில் குதிப்பதுதான் அவளுக்கு அறிகுறி. ஒரு விநாடியைத் தவறவிட்டாலும், தன் வேகத்தால் அதை ஈடுகட்டிவிடுவார். நீச்சல் போட்டிகளில் வெற்றி காண்பார்.
ஆம், ஸ்நேகா ராமுவிற்கு, கேட்டல் குறைபாடு உண்டு. ஆனால், அது அவருக்குக் குறைபாடே இல்லை. தேசிய, சர்வதேச நீச்சல் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களைக் குவித்து வருகிறார். இருபது வயதே நிரம்பிய சென்னையைச் சேர்ந்த ஸ்நேகா, தற்போது ஆசிய அளவில் நடக்கும் நீச்சல் போட்டியில் பங்கேற்கப் பயிற்சி எடுத்து வருகிறார். இவருடைய வெற்றிக்குப் பின்னால் இருப்பது அவருடைய அம்மா ரேவதி. அவருடன் பேசியதிலிருந்து:
“ஸ்நேகாவுக்கு இரண்டரை வயது ஆகும்போதே, அவளுக்குக் காது கேட்கவில்லை என்பதைக் கண்டுபிடித்தோம். பெரிய இடி விழுந்தது போல இருந்தது. இதில், முடங்கிப் போகாமல், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைப்பற்றி யோசித்தோம். அந்தச் சமயத்தில் காது, மூக்கு, தொண்டை மருத்துவரான மனோகருடைய ஆலோசனைகள் நம்பிக்கை அளித்தன.
அவளை பாலவித்யா என்ற பள்ளியில் சேர்த்தோம். காது கேட்காதது பெரிய குறைபாடே கிடையாது என்பதை அந்தப் பள்ளிதான் உணர்த்தியது. பேச்சுப்பயிற்சி வழங்கும் முறையைக் கற்றுக்கொண்டு, அவளோடு நான் தினமும் பேச ஆரம்பித்தேன். அவளால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை அளித்தேன்.
இந்தச் சமயத்தில் தான் சென்னையைச் சுனாமி தாக்கியது. ஒரு சில விநாடிகளில் நான் உயிர் தப்பினேன். இன்னமும் அந்த நாளை என்னால் மறக்க முடியாது. உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நீச்சல் முக்கியம் என சுனாமி கற்றுக்கொடுத்தது. அதையடுத்து, குடும்பத்தில் அனைவரும் நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் என முடிவெடுத்தோம்.
சென்னையில் உள்ள ஒரு முக்கியமான நீச்சல் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தோம். அங்கே இருந்த பயிற்சியாளர் பெயர் கிரிஷ். அவர் ஸ்நேகாவுக்கு நீச்சலில் அபாரத் திறமை இருப்பதைக் கண்டுபிடித்தார். அவளை நீச்சல் போட்டிகளில் விளையாட வைக்க முடியும் என நம்பிக்கை கொடுத்தார்.
அவருடைய கணிப்பு தவறவில்லை. கூர்மையான கவனிப்புத் திறன் மூலம், நீச்சல் கற்றுக்கொண்டார் ஸ்நேகா. கிரிஷ், வீரபத்ரன் இரு பயிற்சியாளர்களும் அவளுடைய நம்பிக்கையை மெருகேற்றினார்கள். பயிற்சியின்போது தன் கவனத்தைச் சிதறவிடமாட்டாள். பல சமயங்களில் பயிற்சியாளர் என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு, தவறைத் திருத்திக்கொள்வாள். அவளுக்கு எப்படி அந்த உத்தரவுகள் புரிந்தன என்பது எனக்கு இன்னமும் புரியாத புதிர் தான்.
பதின்மூன்று வயதில் அவள், மாநில அளவிலும், தேசிய அளவிலும் நீச்சல் போட்டியில் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வெல்லத் தொடங்கினாள். அதுமுதல், மாற்றுத் திறனாளிகளுக்கானது மட்டுமல்லாமல், பொதுவானவர்களுக்கான போட்டிகளிலும் பங்கெடுத்து தம் திறமையை நிரூபித்து வருகிறாள்.
2013இல் நடந்த கேட்டல் குறைபாடு உடையவர்களுக்கான 'டெஃபொலிம்பிக்ஸ்' (Deaflympics) போட்டிகளில் பங்கெடுத்துக்கொண்டாள். அதில், 138 நாடுகள் பங்கேற்றன. அதில் இந்தியா சார்பாக நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு, 17வது இடத்தைப் பிடித்தாள் ஸ்நேகா. எந்த ஒலியையும் அவளால் புரிந்துகொள்ள முடியாது. கவனிக்கும் திறனை மட்டுமே நம்பி சவால்களை எதிர்கொள்கிறாள் ஸ்நேகா. தற்போது, சென்னைப் பல்கலைக்கழகத்துக்காக விளையாடி வருகிறாள். வரவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், நீச்சல் துறையிலும் பங்கெடுத்துக்கொள்ள, பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறாள்.
ஸ்நேகாவின் திறமை, நீச்சலோடு நின்றுவிடவில்லை. விவரம் தெரிந்த வயதில் அப்பா, புற்றுநோய் பாதிப்பால் இறந்துவிட்டார். அதையடுத்து, புற்றுநோய் மருத்துவத்தில் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என விரும்பினார். நீச்சலுக்குக் கொடுக்கும் அதே ஈடுபாட்டை படிப்பிலும் காட்டினார்.
இப்போது சென்னையில் இளநிலை மைக்ரோபயாலாஜி பட்டப்படிப்பு படித்து வருகிறாள். நீச்சல், படிப்பு என இரண்டிலும் உயரத்தை தொட்டு வருகிறாள்.”
மகளின் ஆசையை நிறைவு செய்தார்
ஸ்நேகாவால் மற்றவர்களோடு இயல்பாகப் பழக முடிகிறது. அவளுக்கு நிறைய நண்பர்கள். அப்பா இல்லாத குறைதெரியாமல் அம்மா, அப்பா என இரண்டுமாக இருந்து வளர்த்திருக்கிறார் ரேவதி. முன்பைவிட ஸ்நேகாவால் இப்போது பேச முடிகிறது. அவரால், கேட்டுப் புரிந்துகொள்ள முடியாது. அதனால், புரிந்துகொள்ளும் விதத்தில் வார்த்தைகளை உடைத்து, அதைச் சொல்லப் பழகி வருகிறார்.
யாரையும் சார்ந்து வாழக்கூடாது என்பதில் ஸ்நேகா உறுதியோடு இருக்கிறார். அதனால், பயிற்சிகள், போட்டிகள் என எல்லா இடங்களுக்கும் தனியாகவே செல்கிறார். தன் குறைபாட்டை நினைத்து சோர்வடையாமல், மற்றவர்களையும் ஊக்கப்படுத்தும் ஸ்நேகா, தன் இலக்குகளுக்காக முழு மூச்சுடன் ஈடுபடுகிறார்.

