PUBLISHED ON : மார் 12, 2018

ஸ்கூல் ஆண்டுவிழா மேடையில், ஓவியா பேசிய பேச்சு என்னை ஆச்சரியப்படுத்தியது. என்னா பேச்சு! என்னா குரல்! என்னா கம்பீரம்! பாரதியார், பாரதிதாசன், தாயுமானவர் என்று வரி பிசகாமல் அடுக்கிக்கொண்டே போனாள். எல்லாமே மனப்பாடம்தான். இரண்டு, மூன்று நாட்களாக ஓவியா பேசிப் பேசிப் பார்த்து பயிற்சி செய்துகொண்டிருந்தாள். ஒரு வரி, ஒரு வார்த்தை மறந்துபோகவில்லை. ஒரே கைதட்டல்.
எனக்கு வெட்கமாக இருந்தது. என்னால் மனப்பாடச் செய்யுளைக்கூட ஞாபகம் வைத்துக்கொள்ள முடிவதில்லை. ஓவியாவோ, போன ஆண்டு படித்த பாடல்களைக்கூட நினைவில் வைத்துக்கொண்டிருக்கிறாள். பாடத்தில் மனப்பாடமே கூடாது என்று போனவாரம் உமா மிஸ் சொல்லிக்கொடுத்தன் பலன் என்னை ரொம்பவும் வாட்டுகிறது.
“மனப்பாடம் செய்யறது வேற, ஞாபகம் வெச்சுக்கறது” என்றார் உமா மிஸ்.
“என்ன வித்தியாசம் மிஸ்?”
“மனப்பாடம் செஞ்சது கொஞ்ச நாள்ல மறந்துபோகும். அது ஷார்ட் டெர்ம் மெமரி. ஆனால், நீண்ட காலம் ஞாபகத்துல இருக்கிறதுதான் முக்கியம். அதுக்கு புரிஞ்சுக்கிட்டுப் படிக்கறது அவசியம். அர்த்தத்தைப் புரிஞ்சுக்கிட்டா, எந்த ஒரு விஷயமும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறந்துபோகாது. சரி, ஒரு விஷயம் கேக்கறேன், பதில் சொல்லு. போன சனிக்கிழமை ராத்திரி என்ன டிபன் சாப்பிட்டே?”
“நேத்து சாப்பிட்டதை வேணா சொல்றேன் மிஸ். முட்டைக்கோஸ் பொரியல், முருங்கைக்காய் சாம்பார். பழசு ஞாபகம் இல்லை மிஸ்.”
“நாளைக்கு இதே கேள்வியைக் கேட்டா, இதே பொரியலையும் சாம்பாரையும் சொல்லுவ இல்லையா?”
“நிச்சயமா!”
“நாளன்னிக்கு?”
“நிச்சயம் சொல்வேன் மிஸ். ஏன் கேக்கறீங்க?”
“திருப்பித் திருப்பி ஒரே விவரத்தைச் சொல்லிப் பார்த்துக்கிட்டா அது ஞாபகம் இருக்கும் தானே?”
'ஆமாம்' என்பது போல் தலையாட்டினேன். “இதை வலியுறுத்தறதுதான் 'ஸ்பேஸ்டு லேர்னிங்' (Spaced learning). அதாவது இடைவெளி விட்டுக் கற்றுக்கொள்ளுதல்.” என்ற உமா மிஸ், அந்தக் கற்றுக்கொள்ளும் முறையை விளக்க ஆரம்பித்தார்.
பொதுவாக நாம் எதைப் படித்தாலும் கேட்டாலும் அதை அடுத்த ஒரே நாளில் 75 சதவீதம் வரை மறந்துவிடுவோம். நாட்கள் செல்லச் செல்ல, எஞ்சிய விவரங்களும் கொஞ்சம் கொஞ்சமாக, மறந்துபோக ஆரம்பிக்கும். ஒரு மாதம் கழித்துக் கேட்டால், 90 சதவீதத்துக்கு மேல் மறந்துபோயிருப்போம்.
இதனைத் தவிர்த்து, நினைவாற்றலை அதிகப்படுத்துவதற்கான முறைதான் 'ஸ்பேஸ்டு லேர்னிங்.' இந்த முறைப்படி, வகுப்பறைகளை இங்கிலாந்தில் உருவாக்கியுள்ளார்கள். அதில், முதல் பத்து நிமிடங்கள், பவர் பாயின்ட் பிரசன்டேஷனை வைத்துக்கொண்டு ஒரு பாடம் முழுமையாக விளக்கப்படும். அடுத்த பத்து நிமிடங்கள் இடைவெளி. (பிரேக்). பாடத்துக்குச் சம்பந்தமே இல்லாத விளையாட்டுகளை விளையாட வேண்டும்.
மீண்டும் அடுத்த பத்து நிமிடங்கள், ஏற்கெனவே சொல்லிக் கொடுத்த பாடத்துக்குத் திரும்ப வேண்டும். இம்முறை, அதே பிரசன்டேஷன் ஸ்லைடுகள்தான். ஆனால், அதில் முக்கியமான அறிவியல் சொற்கள், கான்செப்டுகள் இருக்காது. அதை, மாணவர்கள் தங்கள் ஞாபகத்தில் இருந்து எடுத்துச் சொல்லவேண்டும்.
அடுத்த பத்து நிமிடங்கள் மீண்டும் இடைவெளி. இம்முறையும் படிப்புக்கே சம்பந்தமில்லாத கைவேலைகள், விளையாட்டுகளை மாணவர்கள் விளையாட வேண்டும்.
அடுத்த மூன்றாம் பத்து நிமிடங்கள் ஆரம்பிக்கும். இதிலும் அதே பாடம் தான். ஆனால், அது தொடர்பாக ஒரு கேள்வித்தாள் வழங்கப்படும். அதில் மாணவர்கள் தாங்கள் என்ன விஷயங்களைப் புரிந்துகொண்டார்களோ, அதையெல்லாம் ஞாபகப்படுத்தி, பதில் எழுத வேண்டும்.
“இடைவெளி விட்டு விட்டு பாடம் நடத்தினா புரியுமா? ஞாபகம் இருக்குமா மிஸ்?”
“வழக்கத்தைவிட 60 சதவீதம் அதிகமாக ஞாபகம் இருக்குதுங்கறதுதான் ஆய்வாளர்களோட கண்டுபிடிப்பு. முதல் பத்து நிமிஷம் சொல்லிக் கொடுத்தல், இரண்டாவது பத்து நிமிஷம் ஞாபகப்படுத்துதல், மூன்றாவது பத்து நிமிஷம், புரிதலை சோதனை செய்தல். எப்பேர்ப்பட்ட சிரமமான பாடத்தையும் இப்படிச் சொல்லிக் கொடுத்தால், மாணவர்களுக்கு முழுசா ஞாபகம் இருக்காம். அதாவது, ஞாபகங்கள் கிடுகிடுன்னு சரிஞ்சு போகும். மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தும்போது, அந்தப் பாடம், மனசுல பசுமையா பதிஞ்சுடும்.”
“அதை ஏன் மொத்தமா சொல்லிக்கொடுக்காமல், நடுநடுவுல இடைவெளி கொடுக்கறாங்க?”
“அதுதான் முக்கியமான பகுதி. எந்த வகுப்புலேயும், மாணவர்களால தொடர்ச்சியாக அரை மணிநேரமும் பாடத்துலயே கவனம் செலுத்த முடியாது. மூளை சோர்வடைஞ்சுடும். உடனே கவனம் திசைதிரும்பிடும். இந்த முறையில், கவனம் திசைதிரும்புபோது விளையாட்டு. ஓய்வு. வேறு விஷயங்கள் வரும். உடனே மூளை ஃப்ரெஷ்ஷா ஆயிடும். இப்போ மீண்டும் படிச்சா, எல்லாம் ஞாபகத்துலேயே இருக்கும்.”
கேட்கும்போதே ஆச்சரியமாக இருந்தது. இனி நானும் மனப்பாடப் பகுதிகளை இந்த முறையில் படிச்சுப் பார்க்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.
தகவல் பெட்டகம்
ஹெர்மன் எபிங்காஸ்தான் நினைவாற்றல் தொடர்பான பரிசோதனையை உருவாக்கியவர். 19ஆம் நூற்றாண்டு ஜெர்மானிய உளவியலாளர் இவர். இவர்தான் நினைவாற்றல் கிடுகிடுவென சரிவதை நிரூபித்தார்.
ஆர். டக்ளஸ் ஃபீல்ட்ஸ் என்ற ஆய்வாளர், நினைவாற்றலுக்கும் மூளையின் செல்களுக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றி, 2005இல் 'சயின்டிபிக் அமெரிக்கன்' இதழில் ஓர் ஆய்வுக்கட்டுரை எழுதினார். அதனை அடிப்படையாகக் கொண்டு, இந்தக் கல்விமுறையை உருவாக்கியவர் பால் கெல்லி.

