PUBLISHED ON : மார் 12, 2018

பூந்தோட்டத்தில் ஒரு வண்டினைப் பார்க்கிறார் காளமேகப் புலவர். அது ஒரு பூவின் தேனைக் குடித்ததும், அடுத்த பூவிற்கு தாவிச் செல்லும் இயல்பைக் காண்கிறார்.
இப்படி ஒவ்வொரு பூவாக நாடிச்சென்று தேன் குடிக்கும் வண்டுக்கு, எந்தப் பூவின் தேன் இனிமையாக இருந்திருக்கும் என்ற கேள்வி எழுகிறது.
அதைப் பாடலாகவும் பாடுகிறார். அதுவும் எப்படி? த வரிசைப் பாடலாக. அதாவது த வரிசை எழுத்துகளை மட்டுமே எடுத்துக்கொண்டு.
தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி
துத்தித் துதைதி துதைதத்தா தூதுதி
தித்தித்த தித்தித்த தாதெது? தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது?
பாடலில் என்ன சொல்ல வருகிறார்?
தத்தித் தாதூ துதி
தத்திச் சென்று பூக்களில் உள்ள மகரந்தத்தை ஊதிக் குடிக்கிறாய்
தாது ஊதித் தத்துதி
குடித்தபின் மீண்டும் நீ சென்று விடுகிறாய்
(முதல் வரி முடிந்து விட்டது)
துத்தித் துதைதி
'துத்தி' என்று ஒலி எழுப்பியபடி அடுத்த பூவைத் தேடிச் சென்று விடுகிறாய்
துதைதத்தா தூதுதி
அடுத்த பூவுக்குச் சென்று அந்தப் பூவின் மகரந்தத்தையும் உண்கிறாய் (இரண்டாவது வரி முடிந்தது).
தித்தித்த தித்தித்த தாதெது?
மிக மிக இனிப்பான தேன் எது?
தித்தித்தது எத்தாதோ தித்தித்த தாது?
நீ இதுவரை குடித்த பூக்களின் மகரந்தங்களில் மிகவும் இனிப்பான தேன் எது?
'வண்டே, நீ பல பூக்களைத் தேடிச்சென்று தேனை உண்கிறாய். அப்படி நீ உண்ட தேனில், மிகவும் இனிப்பான பூவின் தேன் எது?'
இந்தக் கேள்வியைத்தான் காளமேகம் வண்டிடம் கேட்கிறார்.
புலவருக்கு வண்டு என்ன பதில் சொல்லி இருக்கும்? விடை தெரியாமல் மீண்டும் 'தத்தி தாவி' இருக்குமோ!
இதே தகர வரிசையில் அருணகிரி நாதர், 'கந்தர் அந்தாதி' என்னும் நூலில் முருகனைப் போற்றும் விதமாக இப்படி எழுதி இருக்கிறார்.
'திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே'
இதன் கருத்து
நடனமாடக்கூடிய சிவன், பிரம்மன், பாற்கடலில் ஆதிசேஷன் என்னும் பாம்பை படுக்கையாகக்கொண்ட திருமால். இந்த மூவரும் வணங்குகின்ற ஆனந்த முதலே, தேவயானையின் தாசனே, என்னுடைய இந்த உடம்பு மரணத்தினால் தீயில் தகிக்கப்படும் பொழுது, உன்னை துதித்து வந்த என் ஆன்மாவை, உன்னுடைய திருவடிக்கு நீ ஆட்படுத்த வேண்டும்.

