
மீன் என்றாலே நீரில் இருக்கும். நழுவி ஓடும். உணவாகக் கூடியது. வீடுகளில் வாஸ்துக்காக வளர்க்கப்படுகிறது. இப்படித்தானே எண்ணம் வருகிறது நமக்கு. இதைத்தாண்டி சுறா மீன் போன்ற ஆபத்தான மீன்களும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றில் ஒன்றுதான் (Piranha) பிரன்ஹா.
இந்த மீன் தென் அமெரிக்க நன்னீர் நதிகளில் காணப்படுகிறது. சுமார் 20 முதல் 25 வருடங்கள் உயிர் வாழக்கூடியது. சாம்பல், வெள்ளை, நீலம், சிவப்பு நிறங்களில் காணப்படுகிறது.
இது, புழு, பூச்சி, நத்தை, ஆமை, தாவர இனங்களை உண்ணக்கூடிய அனைத்துண்ணி (ஆம்னிவோர் - Omnivore) ஆகும்.
வேறு உணவு ஏதும் கிடைக்காதபோது தன் இனத்தையே வேட்டையாடி உண்ணும். கூர்மையான பற்கள், வலிமையான தாடைகள் கொண்டது. உணவை வேகமாக சாப்பிடக் கூடியது. தவறி ஆற்றில் விழும் எந்த உயிரையும் அடிக்கும்.
பகல் நேரத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும்.
அதன் முட்டைகளைக் கவரவோ, பயமுறுத்தவோ செய்யும்போதுதான் மனிதர்களைக் கடிக்கும். ஒரு பெண் மீன் சராசரியாக 5000 முட்டைகள்வரை இடும். முட்டைகளைப் பாதுகாக்கும் பணியில் ஆண் மீன்களும் ஈடுபடுகின்றன.
பழங்குடி இன மக்கள் இதன் பற்களை ஆயுதங்களாகவும் கருவிகளாகவும் பயன்படுத்துகிறார்கள்.

