
புகையிலை எதிர்ப்பு நாள் மே 31
புகையிலையில் கார்பன் மோனாக்சைடு நச்சு அதிகம் உள்ளது. இதனால் நுரையீரல், வாய், சிறுநீர்ப் பை, மார்பகம் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படுகிறது.
ஒருவர் செய்யும் தவறுக்கு அவரைச் சுற்றி இருப்பவர்களும் பலி ஆவார்கள் என்றால் அது சிகரெட் புகைக்குத்தான் பொருந்தும்! ஆண்டுதோறும் 6 லட்சம் பேர் இந்த 'செயலற்ற புகைத்தல்' (Passive smoking) மூலம் பாதிக்கப்படுகின்றனர் என உலக சுகாதார நிறுவன ஆய்வு சொல்கிறது!
சிகரெட்டில் உள்ள நிக்கோடின் என்ற நச்சுப்பொருள் புகைப்பவர்களை அடிமை ஆக்குகிறது. ஒரு சிகரெட்டில் கலந்துள்ளவற்றில் 43 வேதிப்பொருட்கள் புற்றுநோய் ஏற்படுத்தக் கூடியவை!
'புகை பிடிப்பது புற்றுநோயைத் தரும், புகையிலை உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும்' என்பன போன்ற விழிப்புணர்வு வாசகங்களை அடிக்கடி பார்க்கிறோம். பார்த்து என்ன செய்ய? பொது இடத்தில் யாராவது புகை பிடிப்பதை நாம் பார்த்தால் அவர்களிடம் தைரியமாகச் சொல்ல வேண்டாமா? இது நமக்கு மட்டும் நன்மையல்ல புகை பிடிப்பவரின் ஆயுளுக்கும் நன்மையே!
புகையிலையால் கிடைக்கும் வருமானம் ஒரு மடங்கு என்றால், புகையிலை பாதிப்பால் ஏற்படும் நோய்களைத் தீர்ப்பதற்கான செலவு பல மடங்கு ஆகிறது. உயிர்க்கொல்லி நோய்களை விட மனிதனுக்கு மரணம் தரும் இரண்டாவது நோயாக இந்த புகையிலை பூதம் இருக்கிறது.
இது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தவே மே 31ல், உலக புகையிலை எதிர்ப்பு தினம் (World No Tobacco Day) கடைபிடிக்கப்படுகிறது. புகையிலையால் ஏற்படும் ஆபத்தையும் அவற்றிலிருந்து விடுபடும் வழிகளையும் சொல்வதே இந்த தினத்தின் நோக்கம். நம்மால்
முடிந்தவரை நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு எடுத்துச் சொல்லுவோம்.

