PUBLISHED ON : மே 30, 2016

உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5
'உங்களுடைய எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்' என்று யாராவது சொன்னால் நம்பலாமா? நாம் வாழும் பூமியின் எதிர்காலமே கேள்விக்குறியாக இருக்கும்போது நம் எதிர்காலம் மட்டும் எப்படி பிரகாசமாக இருக்க முடியும்?
நாம் நலமாக வாழ, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது அவசியம். சுயநலம் இல்லாத இயற்கை நமக்குத் தூய காற்றையும் நீரையும் வழங்குவதோடு உணவு, உடை, வசிக்க இடம் என எல்லாவற்றையும் வழங்கி இருக்கிறது. ஆனால், நமக்கு உதவுகிற இயற்கையை நாம் அழிக்கிறோமே தவிர பாதுகாப்பது இல்லை.
சுற்றுச்சூழல் பாதிப்பு இப்போது சவாலான பிரச்னையாக உருவெடுத்துள்ளது. உலகின் வெப்பநிலை உயர்கிறது, மழை குறைகிறது, பனிகட்டிகள் உருகி கடல் மட்டம் ஏறுகிறது, சுனாமி, வெள்ளம் என இயற்கைப் பேரழிவுகள் சீரழிக்கின்றன. இதனால், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஐக்கிய நாடுகள் சபையால் ஆண்டுதோறும் ஜூன் 5ஆம் தேதி 'உலக சுற்றுச்சூழல் தினம்' (World Environment Day) கடைப்பிடிக்கப்படுகிறது.
நோக்கம்: மனித நடவடிக்கைகளால் சுற்றுச்சூழலில் விரும்பத்தகாத மாற்றங்களும் விளைவுகளும் ஏற்படுகின்றன. அது தொடர்பாக என்ன நடவடிக்கைகளை எடுக்கவேண்டும், அதில் நம் பங்கு என்ன என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
பூமி, நமக்கானது மட்டுமல்ல. பிற உயிர்களுக்கும் பூமி தேவை. நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு, உணவுச் சுழற்சி, உயிர்கள், விவசாயம், பருவ நிலை இவை எல்லாம் பின்னல் போல சுற்றுச்சூழலில் பிணைக்கப்பட்டு இருக்கின்றன. இவற்றில் சிறு மாற்றம் நிகழ்ந்தாலும் அது நம் எல்லாருக்கும் பெரும் கேடு விளைவிக்கும்.
நம் முன்னோர்கள் இயற்கையைப் பாதுகாத்து நம்மிடம் ஒப்படைத்தார்கள். அதுபோல, இன்று இருக்கும் இயற்கையை நாம் பாதுகாத்தால் மட்டுமே, நமக்கு அடுத்துவரும் தலைமுறைக்கு ஏதாவது மிச்சம் இருக்கும். ஆகவே, சுத்தமான நீர், சுத்தமான காற்று, சுத்தமான நிலம் ஆகியவற்றைப் பராமரித்து இயற்கையைக் காப்பது நம் கடமை!
ஐக்கிய நாடுகள் அமைப்பு, கடந்த 1974ஆம் ஆண்டு முதல் இந்த தினத்தில் பல்வேறு கருத்துக்களை வலியுறுத்தி வருகிறது. இந்த வருடத்திற்கான கருத்து 'வனவிலங்குகளுக்கு எதிரான சட்ட விரோத வர்த்தகத்தை துளி அளவும் சகித்துக்கொள்ள கூடாது. (Zero Tolerance for the Illegal Wildlife trade)

