PUBLISHED ON : டிச 12, 2016

அது என்ன ஆதீண்டு குற்றி? இது தமிழ்ச்சொல்தான். முன்னோர் வகுத்த 32 அறங்களுள் ஒன்று, ஆதீண்டு குற்றி. அதன் வேறு பெயர்கள், தன்மத்தறி, நடுதறி, ஆவுரிஞ்சி, ஆவுரிஞ்சு தறி, ஆதீண்டு கல், ஆவோஞ்சிக்கல், மாடுசுரகல்.
ஆ என்ற சொல், இலக்கியங்களில் பசுக்களை, பொதுவாக கால்நடைகளைக் குறிக்கிறது. கால்நடைகளுக்கு, உடம்பில் தினவெடுக்கும் பொழுது, அந்தத் தினவைப் போக்கிக் கொள்வதற்காக, நடப்பட்ட கல்தான் ஆதீண்டு குற்றி. மேய்ச்சல் நிலங்களுக்கு அருகிலும், குளக்கரைகளுக்கு பக்கத்திலும் உயரமான கல் தூண், மரக்கட்டைகளை நட்டு வைத்தனர். இந்தத் தூண்களில் கால்நடைகள் தங்கள் முதுகை உரசிக்கொள்ளும். கால்நடைகளின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுத்து இதை உருவாக்கினர். மரங்களில் உரசினால் வளர்ச்சி பாதிக்கும் என்பதை அறிந்தே, இந்த ஏற்பாட்டை செய்தனர்.
தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள பெருஞ்சொல் அகராதியில், பசுக்கள் உராய்ந்து தம் அரிப்பை நீக்குவதற்கு ஏற்ப நடப்படும் உயரமான கல்தூண் 'ஆதீண்டு குற்றி' என்கிறது.
ஐங்குறுநூறு (277:1-2) பாடலில், 'குறவர் முன்றில் மாதீண்டு துறுகல்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 13, 14ம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் 'தன்மத்தறி' என்று இக்கல்லைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. தர்மத்திற்காக நடப்பட்ட கல் என்பது, இதன் பொருள்.
பிற உயிர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது, இதன் மூலம் தெளிவாகிறது.
- மணி.மாறன்
