
உலக மனநல தினம் அக்டோபர் 10
மனிதர்களின் மன ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், மன நலம் குறித்து மக்களிடம் விளக்கவும், மன நோய்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் 'உலக மன நல தினம்' கொண்டாடப்படுகிறது.
உடல் நலனில் நாம் எவ்வளவு அக்கறை காட்டுகிறோமோ அந்த அளவிற்கு, மன நலத்திலும் கவனம் செலுத்த வேண்டும். உடல், மனம் இரண்டும் ஒன்றாக இணைந்து ஆரோக்கியமான முறையில் செயல்பட்டால் மட்டுமே வாழ்க்கை சிறப்பாக இருக்கும். நவீன வாழ்க்கை முறையில் பல்வேறு மன அழுத்தங்கள் நமக்கு ஏற்படுகின்றன. பாடங்களைப் புரிந்து கொள்ளுதல், தேர்வுக்குத் தயாராதல், வளரிளம் பருவ பிரச்னைகள், நட்புகளில் பிணக்கம், ஆசிரியர்களுடன் உரையாடுதல், புதிய இடங்களுக்குச் செல்லுதல், புதிய நபர்களைச் சந்திப்பதில் தயக்கம் என பல வகையான சிறுசிறு மன அழுத்தங்கள் ஏற்படுகின்றன. இதனால் ஏற்படுகிற பதற்றம் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இவை எல்லாம் தீர்க்க முடியாத பிரச்னைகள் அல்ல. மனம் வெறுமையாக இருப்பது போல் இருந்தால், மன அழுத்தம் இருந்தால் மகிழ்ச்சி தரும் நடவடிக்கைகளில் இறங்குங்கள்! இசை கேட்பது, புத்தகம் வாசிப்பது, பயணங்கள் செல்வது, யோகா பயிற்சிகள் செய்வது, செடிகள் வளர்ப்பது, மரம் நடுவது போன்றவற்றைச் செய்வதன் மூலம், உடலையும், மனதையும் உற்சாகமாகவும் புத்துணர்வுடனும் வைத்துக் கொள்ளலாம்.

