PUBLISHED ON : அக் 10, 2016

உலகின் மிகப் பெரிய ஒற்றை இயந்திரம் 'லார்ஜ் ஹாட்ரான் கொலைடர்' (Large Hadron Collider). மனிதன் படைத்த கருவிகளிலேயே மிகப் பெரியது இதுதான்! வட்ட வடிவில் உள்ள இந்தக் கருவி, பெரிய நிறை உடைய ஹாட்ரான் துகள்களை ஒன்றோடு ஒன்று மோதச் செய்து, பிரபஞ்சம் தோன்றியதைக் கண்டுபிடிப்பதற்காக உருவாக்கப்பட்டது. ஜெனீவா, சுவிட்சர்லாந்து நாட்டு எல்லையில் பூமிக்கு அடியில் 27 கி.மீ. நீளம் உடைய சுரங்கப்பாதையில் இந்தக் கருவி புதைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில், பிரபஞ்சம் தோன்றியது குறித்த ஆய்வில், 3000க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். 'லார்ஜ் ஹாட்ரான் கொலைடர்' கருவியில் பூமியைக் காட்டிலும் ஒரு லட்சம் மடங்கு அதிக காந்தப் புலம் உருவாக்கப்பட்டு, அதன் வழியாகச் செல்லும் துகள்கள் ஆராயப்படுகின்றன. இந்தக் கருவியில் அதிவேகத்துடன் மோதப்படும் துகள்கள் மூலம், பிரபஞ்சத்தின் ஆரம்பப் பெருவெடிப்புக் கணங்களை (Bigbang) உருவாக்கும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது.
பிரபஞ்சத்தைப் படைத்தது யார்?
அண்ட வெளியில் உள்ள பிரமாண்ட அணுக்கள் 1,370 கோடி ஆண்டுகளுக்கு முன் ஒன்றுடன் ஒன்று மோதி வெடித்துச் சிதறியதில்தான் நாம் இருக்கும் பூமி, நட்சத்திரங்கள், கோள்கள் போன்றவை வளி மண்டலத்தில் தோன்றின. 'பிரபஞ்சப் பெருவெடிப்பு' (Universe Bigbang) என குறிப்பிடப்படுகிறது. பிரபஞ்சம் உருவாக அடிப்படையாக இருந்த 12 வகையான அணுத்துகள்களில் 11 அணுத்துகள்கள் அடையாளம் காணப்பட்டுவிட்டன. இவற்றில் 12ஆவது அணுத்துகள்தான் 'ஹிக்ஸ் போசான்' (Higgs boson). 'ஹிக்ஸ் போசான்' அணுத் துகளோடு இணைந்த பிறகே இந்த அணுக்களுக்கு நிறை கிடைத்தது. இது 'கடவுளின் துகள்' என்று சொல்லப்படுகிறது. விஞ்ஞானிகளின் இந்த கண்டுபிடிப்பு இயற்பியல் துறையில் ஒரு மிகப் பெரிய சாதனை.

