PUBLISHED ON : செப் 19, 2016

சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்று மெரினா கடற்கரை. இதன் அசல் நீளம் 13 கி.மீ., சென்னை துறைமுகத்தில் தொடங்கி பெசன்ட் நகர் எலியட்ஸ் பீச் வரை நீள்கிறது.
காலப்போக்கில் கடற்கரையை மறைத்தபடி கட்டடங்கள் வந்துவிட்டதால், தற்போது இருக்கும் கடற்கரைச் சாலையை ஒட்டித்தான் இன்று கடலைப் பார்க்க முடிகிறது. இந்தப் பகுதியைத்தான் 'மெரினா' என்கிறோம். இதன் நீளம் 6 கி.மீ.
சென்னை துறைமுகம் 1881ல் கட்டி முடிக்கப்படுவதற்கு முன்னால், இன்றைக்கு சாலை இருக்கும் இடம்வரை, கடல் அலைகள் தொட்டுச் செல்லும். கடற்கரையில் சேறும் சகதியும் நிறைந்து இருக்குமாம். துறைமுக அமைப்பு வந்தபிறகு, கொஞ்சம் கொஞ்சமாகக் கரை எல்லை உள்வாங்கி, மணற்பரப்பு விரிந்துவிட்டது.
சென்னையின் ஆளுநராக 1881ல் இருந்து 1886ஆம் ஆண்டுவரை பொறுப்பு வகித்தவர், சர் மௌன்ட்ஸ்டூவர்ட் எல்ஃபின்ஸ்டன் கிரான்ட் டஃப். (Sir Mountstuart Elphinstone Grant Duff). ஆளுநராவதற்கு 10 வருடங்கள் முன்னர், இவர் சென்னைக்கு வந்தபோது, இந்தக் கடற்கரையின் அழகால் ஈர்க்கப்பட்டார். ஆளுநர் ஆனதும் கடற்கரையை ஒட்டி நீண்ட நடைபாதையை உருவாக்கி அழகுபடுத்தினார். 'மெரினா' என்று பெயர் சூட்டியவரும் இவர்தான். 'மெரினா' என்றால் ஆங்கிலத்தில் 'உல்லாசப் படகுகள் நிறுத்தப்பட்டு இருக்கும் இடம்' என்று அர்த்தம். இத்தாலியில் இருக்கும் சிசிலித் தீவின் மெரினாக்கள் எல்ஃபின்ஸ்டனுக்கு மிகவும் பிடிக்குமாம். அவற்றின் நினைவாக 'மெரினா' என்ற பெயரை வைத்திருக்கிறார். அதற்கு முன் ஆங்கிலேயர்கள் இதனை 'சவுத் பீச்' (தென் கடற்கரை) என்று குறிப்பிட்டார்கள்.
