PUBLISHED ON : ஏப் 04, 2016
யுனெஸ்கோ (UNESCO) அமைப்பின் உயிர்க்கோளக் காப்பகப் பட்டியலில் (பயோஸ்பியர் ரிசர்வ் - Biosphere Reserve) அகஸ்திய மலை இணைக்கப்பட்டுள்ளது. தமிழக -கேரள எல்லையில் திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த மலை உள்ளது.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதும், சீரான முறையில் இயற்கை வளங்களை உபயோகப்படுத்தும் வழிமுறைகளை உருவாக்க வேண்டியதும் அவசியம். இதற்காக,'மனிதனும் உயிர்க்கோளமும்' என்ற திட்டம் யுனெஸ்கோ அமைப்பால் 1977ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி, வனப்பகுதிகள், கடல்வளப் பகுதிகள், போன்ற இடங்களில் உயிர்க்கோளக் காப்பகங்கள் உருவாக்கப்படுகின்றன. அங்கே வனப்பகுதிகள், வன, கடல்வாழ் உயிரினங்கள், மருத்துவத் தாவரங்கள் போன்றவை பாதுகாக்கப்படுகின்றன. அழிவின் அபாயத்தில் இருக்கும் தாவரங்கள், உயிரினங்கள் தொடர்பான கல்வி, பயிற்சி, ஆராய்ச்சி நடவடிக்கைகள் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன.
உலகில் உள்ள, 107 நாடுகளில், 553 உயிர்க்கோளக் காப்பு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தியாவில், 18 உயிர்க்கோளக் காப்பகங்கள் உள்ளன. இவற்றில், நீலகிரி, நந்தா தேவி, நோக்ரெக், மன்னார் வளைகுடா, சுந்தரவனக் காடுகள், கிரேட் நிகோபார், அகஸ்திய மலை போன்ற பகுதிகள் யுனெஸ்கோவின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
உயிர்க்கோளக் காப்பகங்களில் தாவரங்கள், விலங்குகள் மட்டும் பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை... இங்கு வாழும் மனித சமுதாயத்துக்கும் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

