
மான் குட்டியையோ, மானையோ பார்த்தால் மனதுக்குள் உற்சாகம் பிறக்கும். அருகே சென்று அதன் அழகை ரசிக்கத் தோன்றும். அப்படி நம்மை மிகவும் கவர்ந்த மானில் தோராயமாக 90 வகைகள் இருக்கின்றன. மான், செர்விடய் (Cervidae) எனும் பாலூட்டி குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் வாழ்நாள் சராசரியாக 2 லிருந்து 4 வருடங்கள் ஆகும். புல், பூண்டு, இலை, துளிர், மொட்டு, காய், கனிகள் சாப்பிடும் தாவர உண்ணி, மான்.
ஆண் மான்களின் கொம்புகள் (Antlers) மற்ற விலங்குகளின் கொம்புகளில் இருந்து மாறுபட்டவை. இதன் கொம்புகள் உதிர்ந்தாலோ உடைந்து விட்டாலோ மறுபடியும் வளரும். ஆனால் மற்ற விலங்குகளுக்கு இவ்வாறு வளர்வதில்லை. சில இனங்களில் பெண் மான்களுக்கும் கொம்புகள் இருக்கும். சிலவற்றிற்கு இருக்காது.
இதன் செவிப்புலன் நுட்பமானது. வெகுதூரத்தில் இருந்து வரும் சிறு சத்தமும் தெளிவாகக் கேட்கும். சத்தம் எவ்வளவு தொலைவிலிருந்து வருகிறது என்பதையும் அறியும். இந்த ஆற்றல்தான் அதை ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறது.
ஏதாவது சத்தம் வந்தால், உடனே அந்த திசையில் காதையும் கண்ணையும் வைத்து சுற்றிலும் கவனிக்கும். மூக்காலும் வாசனையை நுகரத்தொடங்கும். அந்த வாசனை காற்றில் கலந்து இதன் ஈரப்பதமான நாசியில் பட்டு மோப்ப உறுப்புகளுக்கு அறிவித்துவிடும். இப்படி தன் சுற்றுப்புறத்தை பல தடவை, ஆராய்ந்த பிறகே வழக்கமான செயலுக்குத் திரும்பும்.
இதன் கண்கள் தலையின் பக்கவாட்டில் உள்ளதால், நேராக பார்த்துக்கொண்டிருக்கும்பொழுதே பின்னாலும் பார்க்க இயலும். ஆனால் ஒரு பொருளை இரு கண்களால் ஒரு சேர பார்க்க இயலாது.
பெண் மான், ஒன்றிலிருந்து மூன்று குட்டிகள் வரை ஈனும். மான் குட்டிகள் பிறந்த சில மணி நேரங்களிலேயே எழுந்து நடை பயில ஆரம்பித்து விடுகின்றன.
மானுக்கு அரிணம், உழை, குரங்கம், சாரங்கம், சூனம், நவ்வி, பிணை, மறி, மிருகம், ஒருத்தல், கருமான், கலை, புல்வாய், வச்சையம், ஏணி என பல பெயர் உண்டு தமிழில். மான் தோல் ஏணம் என்று அழைக்கப்படுகிறது.

