
ஈ.வெ.ரா. பெரியார் பிறந்த தினம் செப்டம்பர் 17
“தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்
அவர்தாம் பெரியார்”
என்று சொன்னவர் பாவேந்தர் பாரதிதாசன்!
யார் இந்தப் பெரியார்? மேலே பாட்டில் வருவதுபோல தூய வெந்நிற தாடியுடன், பழுத்த பழமாக இருக்கும் முதியவரைத்தான் பெரியார் என்கிறோமா? இல்லை!
சமூக சீர்திருத்தத்திற்காகவும் சாதி வேற்றுமையை அகற்றுவதற்காகவும் தீண்டாமை, மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து அழிப்பதற்காகவும் பெண் விடுதலைக்காகவும் போராடிய போராட்ட வீரர்தான் பெரியார்!
ஈ.வெ.ரா. என்று அழைக்கப்படும் ஈரோடு வெங்கடப்பர் ராமசாமி, வசதியான வணிகக் குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு ஒரு சகோதரனும் இரண்டு சகோதரிகளும் உண்டு. தனது படிப்பை ஐந்தாம் வகுப்புடன் முடித்துக்கொண்ட ஈ.வெ.ரா. 12ஆவது வயதில் தந்தையுடன் வணிகம் செய்ய ஆரம்பித்தார். இளம் வயதிலேயே, தனது பகுத்தறிவுச் சிந்தனையால் பல கேள்விகள் கேட்கத்தொடங்கினார். “நான் சொன்னாலும்கூட பகுத்தறியாமல் ஏற்காதே! ஏன், எதற்கு? என்று கேள்வி கேள்!” என்றார். “பெண் பிள்ளைகளுக்கு சில்லுகோடு விளையாட்டிற்குப் பதிலாகச் சிலம்பம் கற்றுக்கொடுக்கலாம்” என்றும் “பக்தியைவிட ஒழுக்கம் முக்கியம்” என்றும் கூறினார்.
தன்னுடைய 19ஆவது வயதில் நாகம்மையாரை மணந்துகொண்டார். நாகம்மையாரும் திருமணத்திற்குப் பிறகு கணவரின் புரட்சிக்குத் தன்னை முழுவதுமாக இணைத்துக்கொண்டார். சாதிமறுப்புத் திருமணங்களை நடத்திவைத்தார். அனைத்து சமய, சாதியினருடனும் சேர்ந்து விருந்து உண்டார். இதனால், தந்தையுடன் ஏற்பட்ட மனக் கசப்பால் காசிக்குச் சென்றார். காசியில் நடந்த நிகழ்வுகள் அவருடைய எதிர்கால புரட்சிகரச் சிந்தனைக்குக் காரணமாக அமைந்தன. அதுமட்டுமல்லாமல், இறைமறுப்பாளராகவும் (நாத்திகவாதி) தன்னை மாற்றிக் கொண்டார்.
தமிழ்நாட்டு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தபோது, வெளிநாட்டுத் துணிகளை விற்ற வணிகர்களுக்கு எதிராக மறியல்; கள்ளுக்கடைப் போராட்டம்; கேரளாவில் வைக்கம் என்னும் ஊரில் தலித் மக்களுக்கு ஆதரவான போராட்டம் என பங்கேற்றுக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்குப் பிறகே 'வைக்கம் வீரர்' என தமிழக மக்களால் அழைக்கப்பட்டார். பின்னர் காங்கிரசிலிருந்து விலகிய பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கம், மூடப்பழக்க வழக்கங்களை மக்களிடம் இருந்து அகற்றுவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டது.
மக்களின் விடியலுக்காகப் போராடியவர்; இந்திய விடுதலையில் பங்காற்றி, மதுவிலக்குக் கொள்கைகளை காந்திக்கு எடுத்துரைத்தவர்; பெண் அடிமைத்தனத்துக்கு எதிராக பிரசாரம் செய்து சீர்திருத்தத் திருமணம் என்றொரு புதிய வாழ்க்கை ஒப்பந்த முறையை சட்டமாக வழி வகுத்த மாபெரும் சிந்தனையாளர் 'பெரியார்' என்றால் அது மிகையாகாது!
* 'யுனெஸ்கோ நிறுவனம்' ஜூன் 27, 1973ல் பெரியாரை 'புத்துலக தொலைநோக்காளர்', 'தென்னிந்தியாவின் சாக்ரடீஸ்', 'சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை' என பாராட்டி விருது வழங்கியது.
* தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு நவம்பர் 1938ல் சென்னையில் நடைபெற்றது. அப்போது, ஈ.வெ.ராமசாமிக்கு 'பெரியார்' என்ற சிறப்புப் பெயரையே வழங்குதல் வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

