PUBLISHED ON : மார் 19, 2018

ஒரேயொரு சொல்லை வைத்துக்கொண்டு, பற்பல பொருள்களில் அச்சொல்லைப் பயன்படுத்தி செய்யுள் இயற்றுவதில் நம் பழந்தமிழ்ப் புலவர்கள் வல்லவர்கள். தமிழ் மொழியில், ஒரு சொல்லுக்குப் பல பொருள்கள் வழங்கப்படும். எடுத்துக்காட்டாக, காசு என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். அச்சொல்லுக்கு நாம் உடனே கருதும் பொருள் நாணயம் என்பதாகும். காசு என்பதற்கு நாணயம் மட்டுமே பொருளில்லை. குற்றம் என்ற பொருள் இருக்கிறது. கோழை என்ற பொருள் இருக்கிறது. இவ்வாறு ஒரு சொல்லுக்கு, ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள்கள் இருக்கும். ஒரு சொல் பல பொருள்களைத் தருகின்ற தன்மையைப் பயன்படுத்தி நம் புலவர்கள் ஒரு செய்யுளை எழுதினால், அது சுவையாகத்தானே இருக்கும்? சுந்தரக் கவிராயர் என்னும் புலவர் இயற்றிய இந்தத் தனிப்பாடலைப் பாருங்கள்.
மரமது மரத்தில் ஏறி
மரமதைத் தோளில் வைத்து
மரமது மரத்தைக் கண்டு
மரத்தினால் மரத்தைக் குத்தி
மரமது வழியே சென்று
வளமனைக்(கு) ஏகும்போது
மரமது கண்ட மாதர்
மரமுடன் மரமெடுத்தார்!
படித்தவுடன் இச்செய்யுளுக்குப் பொருள் விளங்குகிறதா? விளங்கவேயில்லை. மரம் என்ற ஒரு சொல்லை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி இச்செய்யுள் எழுதப்பட்டிருக்கிறது. மரம் என்றால் தெரியும். ஓங்கி உயர்ந்து வளர்ந்து பல்லாண்டுகளுக்கு நிலைக்கும் உறுதியான தாவரங்களே மரங்கள். மரம் என்ற சொல்லால் எல்லா மரங்களையும் பொதுவாகக் குறிப்பிட்டுச் சொல்லலாம். உதாரணமாக, வேம்பு, பலா, மா என எல்லா மரங்களையும் மரம் என்று பொதுவாகச் சொல்வது வழக்கம்தானே? மரம் என்ற பொதுக்குறிப்புச்சொல் வழியே அப்பாடலின் பொருளை அறியலாம்.
* மரம் அது - அரச மரம் - அரசனானவன்
* மரத்தில் ஏறி - மா மரம் - மா என்பதற்கு இன்னொரு பொருள் குதிரை - குதிரையில் ஏறி
* மரமதைத் தோளில் வைத்து - வேல மரம் - வேலினைத் தோளில் வைத்து
* மரமது மரத்தைக் கண்டு - வேங்கை மரம் - அரசனானவன் வேங்கைப் புலியைக் கண்டு
* மரத்தினால் மரத்தைக் குத்தி - வேலினால் வேங்கையைக் குத்தி
* மரமது வழியே சென்று - அரசன் வந்த வழியே திரும்பிச் சென்று
* வளமனைக்கு ஏகும்போது - தன் அரண்மனை உள்ள நகர்க்குள் நுழையும்போது
* மரமது கண்ட மாதர் - அரசனைக் கண்ட பெண்கள்
* மரமுடன் மரமெடுத்தார் - ஆல் அத்தி ஆகியவையும் மரங்களே - ஆலுடன் அத்தியும் எடுத்தார் அதாவது ஆல(ர)த்தி எடுத்தார்.
மரம் என்ற ஒரே சொல்லைக்கொண்டு அதன் பல்வேறு பொருள்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட சொற்பொருள் இன்பம் தரும் செய்யுள் இது. ''அரசன் குதிரைமீதேறி வேல் தாங்கிய தோளோடு வேட்டைக்குச் சென்று, வேங்கைப் புலியைக் கண்டு வேலினால் குத்தினான். அவ்வேட்டை முடித்து வந்த வழியே திரும்பி அரண்மனையை அடைந்தபோது அங்கிருந்த பெண்கள் ஆலத்தி எடுத்து வரவேற்றார்கள்” என்பதைத் தம் புலமையால் இவ்வாறு கூறி வியக்க வைக்கிறார் சுந்தர கவிராயர்.
- மகுடேசுவரன்
