PUBLISHED ON : ஏப் 18, 2016

நத்தை, நீர் நிலம் இரண்டிலும் உயிர் வாழும் மெல்லுடலி உயிரினம். மெல்லிய ஓட்டினால் இதன் உடற்பகுதி மூடப்பட்டிருக்கும். நிலத்தில், கடலில், தூய்மையான நீரில் என மூன்று வகையான நத்தைகள் உள்ளன. கடலில் வாழும் நத்தைகள் செவுள்கள் (கில்ஸ் / Gills) வழியாகச் சுவாசிக்கின்றன.
நிலத்தில் வாழும் நத்தைகள் நுரையீரல் (லங்ஸ்/Lungs) வழியாகச் சுவாசிக்கின்றன.
பாம்புகளைப் போலவே நத்தைகளுக்கும் காதுகள் கிடையாது. வாசனை, உணர்வு நரம்புகள் வழியாக உணவு இருக்கும் இடத்தை அறிந்து கொள்கின்றன.
பருவ நிலை மாற்றங்களை நத்தைகள் முன்கூட்டியே உணரும் தன்மை கொண்டவை. மழை வருவதற்கு முன்பே அவை பாதுகாப்பான இடம் நோக்கி நகர்ந்து செல்லும். கொலம்பிய மக்கள் நத்தையை மகிழ்ச்சிக்கான சின்னமாகக் கருதுகிறார்கள்.
12 அங்குலம் உள்ள ராட்சச நத்தைகள் கூட உள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் (Ghana) இவ்வகை நத்தைகள் உயிர் வாழ்கின்றன. இவை தன் உடல் எடையைவிட பத்து மடங்கு எடையைத் தூக்கிச் செல்லும் பலசாலி நத்தைகள்.
