PUBLISHED ON : அக் 18, 2016

இணையதள உலகம் விசித்திரமானது. ஒரு பக்கம் எண்ணற்ற வசதிகள் இருந்தாலும், இன்னொரு பக்கம் தொல்லைகள் தரும் விஷயங்களும் இருக்கின்றன. இணையதளத்தில் நடக்கும் குற்றங்களைப் பற்றியும், பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும், சென்னையில் அக்டோபர் முதல் வாரத்தில் நடந்த தேசிய சைபர் பாதுகாப்பு மாநாட்டில் விவாதிக்கப்பட்டன.
'நேஷனல் சைபர் சேஃப்டி அண்ட் செக்யூரிட்டி ஸ்டாண்டர்ட்ஸ்' (National Cyber Safety and Security Standards) எனும் அமைப்பு, மத்திய, மாநில அரசுகளின் ஆதரவுடன், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இந்த மாநாட்டை நடத்தியது.
எதிர்காலத்தில் இணையதள ஆபத்துகள் தீவிரமாகாமல் தடுக்கவும், தற்காத்து கொள்ளும் உத்திகளையும் தொழில்நுட்ப வல்லுநர்கள் விளக்கினார்கள். சைபர் தாக்குதலால் நாடுகளுக்கு ஏற்படக்கூடிய பொருளாதார பாதிப்பு குறித்தும் விவாதம் நடந்தது.
“சைபர் பாதுகாப்பு என்பது தொழில்நுட்பம் சார்ந்தது மட்டும் அல்ல; இணையதளம் பயன்படுத்தும் நமக்கும் தொடர்பு இருக்கிறது. நம்முடைய தினசரி வாழ்க்கையை எளிமையாக்க எல்லா வகையான நவீன தொழில்நுட்பங்கள் வந்தாலும், அவற்றைப் பயன்படுத்தும் நமக்கு, சரியான புரிதலும் விழிப்புணர்வும் இல்லை என்றால் எந்தப் பயனும் இல்லை,” இவ்வாறு அந்த மாநாட்டில் கலந்துகொண்ட வல்லுனர்கள் கூறினார்கள்.
பாதுகாப்பு நடவடிக்கைகள்:
இணையத்தில் முழு விவரங்களையும் கொடுக்க வேண்டாம். முக்கியமாக சமூக வலைதளங்களில் பதியக் கூடாது.
புகைப்படங்கள் பகிர்வதைத் தவிர்க்கலாம். தற்போது உள்ள தொழில்நுட்பங்கள் மூலம், அந்தப் புகைப்படங்களை எளிதாக மாற்ற முடியும்.
password--ஐ யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.
பணபரிமாற்றங்கள் செய்யும் பொழுது அந்த பக்கத்தின் முகவரியை பாருங்கள். http::// என இருந்தால் விவரங்களைக் கொடுக்கக் கூடாது. ஒரு s-உடன் https:// என்று இருந்தால் மட்டுமே மேற்கொண்டு தொடருங்கள். S - Secure (செக்யூர்).
சைபர் குற்றங்கள்
ஸ்பாம் (Spam) எனப்படும் தேவையில்லாத அச்சுறுத்தும் மின்னஞ்சல்கள் அனுப்புதல்.
இணையத்தில் பணபரிமாற்றங்கள் நடக்கும்பொழுது, கடவுச்சொல் (Password - பாஸ்வேர்டு) போன்ற கணக்கு விவரங்களைத் திருடுவது.
கணினி மற்றும் தகவல் தொழில்நுட்ப சாதனங்களிலிருந்து தகவல்களை திருடுவது.
வேறு ஒருவருடைய தகவல்களைப் பயன்படுத்தி இணையத்தில் உலவுவது.
பிறரது வலைத்தளங்களைத் திருடி, தடைசெய்யப்பட்ட பொருள்களை விற்பனை செய்வதற்குப் பயன்படுத்துதல்.
