PUBLISHED ON : அக் 18, 2016

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியால், எந்திரங்கள் அனைத்தும் உயிர் பெற்று வருகின்றன. இன்னும் சில வருடங்களில் மனிதர்களை மிஞ்சும் அளவுக்கு, ரோபோக்களின் வளர்ச்சி இருக்கும் எனத் தோன்றுகிறது! அந்த வகையில் மருத்துவ துறையிலும் ரோபோக்கள் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளன.
இங்கிலாந்து, ஆக்ஸ்ஃபோர்டில் உள்ள ஒரு தேவாலயத்தில், துணை பாதிரியாராக பணியாற்றுபவர் வில்லியம் பீவெர். 70 வயதான இவருக்குத்தான் கடந்த செப்டம்பர் மாதம் முதன்முதலில் ரோபோவால் கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
ஜாய்ஸ்டிக் (Joystick) மூலம் இயங்கும் அந்த ரோபோ, நோயாளியின் கண்ணில் இருந்த ஒரு படலத்தை வெற்றிகரமாக அகற்றியுள்ளது. அறுவை சிகிச்சை முடிந்த பிறகு, “எனக்கு இப்போது கண் நன்றாகத் தெரிகிறது; என்னுடைய பார்வை கண்ணாடியால் ஆன அறையில் இருந்து பார்ப்பது போலத் தெளிவாக உள்ளது,” என்று கூறியுள்ளார்.
இந்தச் சாதனையை நிகழ்த்தியவர்கள் ஆக்ஸ்ஃபோர்டில் இருக்கும் ஜான் ரேட்க்ளிஃப் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள். இது குறித்து மருத்துவ பேராசிரியர் ராபர்ட் மேக்லரேன் கூறும்போது, “வளர்ந்து வரும் நாடுகளில் விழித்திரையில் ஏற்படும் நோய்களே பார்வை இழப்புக்கு முக்கியக் காரணமாக உள்ளது.
தற்போதுள்ள லேசர் ஸ்கேனர் (Laser Scanner) மற்றும் நுண்ணோக்கிகள் மூலம் கண்களில் உள்ள குறைபாடுகளை நுண்ணிய அளவிலேயே பார்க்க முடியும். மனிதனின் கைகளைவிட ரோபோவின் கைகளால் மிகவும் துல்லியமாகச் செயல்பட முடிகிறது. கண்ணின் உட்பகுதிகளையும் மிகத் துல்லியமாகப் பார்க்க முடியும். கண் அறுவை சிகிச்சைகளில் நாங்கள் ஒரு புதிய கதவைத் திறந்திருக்கிறோம்,' என்றார்.
இன்னும் சில வருடங்களில், வேலைக்கு ரோபோக்கள் தேவை என்ற விளம்பரங்கள் வந்தாலும் வரலாம்!
