
நேற்று மாலை, “கடற்கரைக்குப் போய் ரொம்ப நாளாச்சு. போவோமா?” என்றேன் ஞாநி மாமாவிடம். “வெளிச்சம் இருக்கும்போதே போவோம். இருட்டியபிறகு கடற்கரைக்குப் போவது வீண்” என்றார் மாமா. உடனே எல்லாரும் கிளம்பிப் போனோம்.
கடற்கரையில் எவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தாலும், எனக்கு அலுப்பதே இல்லை. விளையாட ஏராளமான மணல். கடலோரமாக காலில் லேசாக தண்ணீர் படுகிற மாதிரி நடந்துகொண்டே இருக்கலாம். சூரியனும் சந்திரனும் அடுத்தடுத்து கடல் பரப்பு மீது நடத்தும் வெளிச்ச நடனம் அற்புதமாக இருக்கும். இதை மாமாவிடம் சொன்னதும், “நீ பார்க்கும் இதே திருவல்லிக்கேணி கடற்கரையில் உட்கார்ந்துகொண்டு சுமார் நூறு வருஷங்களுக்கு முன்னால் பாரதியும் பார்த்திருக்கிறார். அதைப்பற்றி எழுதியிருக்கிறார்” என்றார். வீடு திரும்பியதும், பாரதி பாடல்களை எடுத்துப் பார்த்தேன். பாஞ்சாலி சபதம் என்ற காவியத்தில், 148ம் பாட்டிலிருந்து 152ம் பாட்டு வரை ஒரே வர்ணனைதான்.
இதைத் தவிர, ஒரு கட்டுரையும் பாரதி எழுதியிருக்கிறார். அதை பாட்டின் அடிக்குறிப்பிலே கொடுத்திருக்கிறார். முதல் பத்தியே 'போட்டு தாக்கு'தான். “உலகத்தின் எங்கு பார்த்தாலும் நிறைந்து கிடக்கும் லாவண்யங்களைத் தமிழர்கள் கவனிப்பது கிடையாது. சனிக்கிழமை சாயங்கலாம் தோறும் குளக்கரைகளில் போய் கருடன் பார்ப்பதற்கென்றால், நம்மவர்கள் கூட்டங் கூட்டமாக ஓடுகிறார்கள். சூரிய அஸ்தமன காலத்தில் வானத்திலே தோன்றும் அதிசயங்களைப் பார்க்க ஒருவன் கூடப் போகிறதில்லை. அப்போது வானத்திலே இந்திர ஜால மஹேந்திர ஜாலங்களெல்லாம் நடக்கின்றன. இந்த க்ஷணம் இருந்த தோற்றம் அடுத்த க்ஷணம் இருப்பதில்லை. உலகத்திலுள்ள திரவியம் முழுவதையும் செலவிட்டு வர்ணக் காட்சிகள் ஏற்படுத்திப் பார்ப்போமானாலும், அது சூரிய அஸ்தமன காலத்தில் வானத்தில் நாம் செலவில்லாமல் பார்க்கக்கூடிய காட்சிகளில் கோடியில் ஒரு பங்கு கூடக் காணாது” என்று எழுதும் பாரதி, அந்தக் காட்சியை தொடர்ந்து விரிவாக வர்ணித்துக் கொண்டே போகிறார்.
அலைகளில் கால் நனைத்துவிட்டு, மணலில் நின்றுகொண்டு கடலையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
இந்தக் கடலுக்குள் என்ன இருக்கும்? எவ்வளவு ஆழம் இருக்கும்? வாலு உடனே புள்ளி விவரங்களாக அடுக்கியது. விதவிதமான மீன்கள், சுறா, திமிங்கிலம், நட்சத்திர மீன், ஜெல்லி ஃபிஷ், கடற் குதிரை, இன்னும் என்னவென்றே நமக்கு தெரியாத பல உயிரினங்கள் எல்லாம் கடலில் இருக்கின்றன. உயிரினங்களில் 94 சதவிகிதம், கடலிலும் நீரிலும் வாழ்பவை. நிலத்தில் வாழும் உயிரினங்கள், ௬ சதவிகிதம்தான்.
நாம் உயிர் வாழத் தேவையான ஆக்சிஜன் கூட, கடலிலிருந்துதான் நமக்குக் கிடைக்கிறது. காற்றில் இருக்கும் ஆக்சிஜனில் பாதியை அனுப்பிவைப்பவை 'பைட்டோபிளாங்க்டான்' என்ற ஒரு செல் உயிரிகள்தான். அவை கடலின் மேற்பரப்பில் இருக்கின்றன.
“பூமியின் பரப்பில் 71 % கடல் நீர்தான் என எனக்குத் தெரியும். ஆனால், இந்தக் கடல் தண்ணீர் ஏரி மாதிரி தேங்கியே இருக்குமா? அல்லது பசிஃபிக் கடல், அட்லாண்டிக் கடல், இந்தியக் கடல் என்று எல்லாம் இருக்கிறதே இந்த ஒரு கடலிலிருந்து இன்னொரு கடலுக்கு தண்ணீர் போகுமா?” என்று கேட்டேன்.
“நம் வசதிக்காக பெருங்கடல்களைப் பிரித்துச் சொல்கிறோம். உண்மையில், ஒன்றோடொன்று இணைந்தவைதான். கடலுக்குள் நீரோட்டம் உள்ளது. ஒரு பக்கம் பனி உருகி தண்ணீராகும். இன்னொரு பக்கம் நீர் சூடாகிக் கொண்டிருக்கும். ஒரு கடலிலிருந்து இன்னொரு கடலுக்கு சுழற்சியில் தண்ணீர் போவதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஒரு முறை அப்படி தண்ணீர் கடலுக்குள் சுற்றிவர ஆயிரம் வருடங்களாகுமாம்.” என்றார் மாமா.
“கடலுக்கு அடியிலே என்ன இருக்கிறது? தரை இருக்குமா?” என்று கேட்டான் பாலு. “கடலின் அனைத்து அடிப்பகுதிக்கும் மனிதர்கள் போய் பார்க்கவில்லை. கடலைப் பற்றி நமக்கு இது வரை தெரிந்தது, ஐந்து சதவிகிதம்தான் என்கிறார்கள். கடலுக்குள் மிக அதிகமான ஆழம் 11 கிலோமீட்டர் என்று கணக்கிட்டார்கள். சராசரி ஆழம் எல்லா கடலிலும் நான்கு கிலோமீட்டர்தான். ஓர் அளவுக்கு மேல் ஒளி ஊடுருவிச் செல்ல முடியாது என்பதால், பெரும் பகுதி கடல் உள்ளே இருட்டுதான்.'' என்றார் மாமா.
“அங்கெல்லாம் நாம் போக முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?” என்றான் பாலு. “நீர்மூழ்கிக் கப்பலை அதற்குத்தானே கண்டு பிடித்தோம்? ஆனால், அதுவும் ஒரு குறிப்பிட்ட ஆழம் வரைதான் செல்லும்” என்றார் மாமா. “கடலடியில் போய் பார்த்தால், பெரிய பெரிய மலைகள் இருக்கும்” என்றது வாலு.
“என்னது, கடலுக்குள் மலையா?”
“ஆமாம். மிக நீளமான மலைத் தொடரே இருக்கிறது. அட்லாண்டிக் கடல், பசிஃபிக் கடல், இந்து மாக்கடல் மூன்றின் மத்தியிலுமாக சுமார் 35 ஆயிரம் மைல் நீளத்துக்கு ஒரு மலைத்தொடர் கடலுக்குள் இருக்கிறது. ஆல்ப்ஸ் மலையைவிட உயரமானது. மொத்த பூமிப் பரப்பில், 23 சதவிகித அளவுக்கு இந்த கடல் மலை இருக்கிறது.” என்றது வாலு.
“இந்தக் கடல் மலைக்கு எப்போது மனிதர்கள் போனார்கள் தெரியுமா?” என்று கேட்டார் மாமா. “நிலவுக்கே மனிதன் போய் வந்த பிறகுதான்! இதில் வியப்பு இல்லை. நமக்கு இப்போதுகூட செவ்வாய் கிரகம் பற்றிஆராய்ந்து வைத்திருக்கும் தகவல்களோடு ஒப்பிடும்போது, கடலுக்குள் இருப்பவை பற்றிய தகவல்கள் கம்மிதான் என்கிறார்கள். கடல் அவ்வளவு ரகசியங்களை தனக்குள் இன்னும் வைத்துக் கொண்டிருக்கிறது.” என்றார்.
பாலு வாயைத் திறந்ததுமே, நாங்கள் மூவரும் சிரித்துவிட்டோம். “நீ கடல் ஆராய்ச்சியாளனாகப் போகிறாய் இல்லையா?” என்றேன். “நான் சொல்ல வந்தது அது இல்லை. எல்லா குப்பைகளையும் கடைசியில் நாம் கடலுக்குள்தானே அனுப்பிக் கொண்டிருக்கிறோம் என்று கேட்க வந்தேன்.” என்றான் பாலு.
“பல குப்பைகள் மக்கிக் கரைந்துவிடும். ஆனால், கடலுக்குள் போனாலும், மக்காத குப்பை பிளாஸ்டிக்தான். அது பொடிப் பொடியாகி மணல் துகள் மாதிரி கடலடியில் போய் தேங்கியிருக்கிறதாம். ஐந்து பெருங்கடல்களிலும் இப்படி இருப்பதை, பிளாஸ்டிக் சூப் என்கிறார்கள். அந்த துகள்கள் மீன்களின் உடலில் கலந்து நம் சாப்பாட்டு மேசைக்கே திரும்ப வருகிறதாம்.”
“பிளாஸ்டிக்கைக் கரைக்க, ஏதாவது கெமிகல் கண்டுபிடிக்க முடியுமா என்று பெரியவன் ஆனதும் முயற்சிக்கப் போகிறேன்.” என்றான் பாலு. “அதற்குள் ஒரு பெருங்கடல் அளவுக்கு பிளாஸ்டிக் சூப் பெருகிவிடும்” என்றேன்.
“இப்ப தக்காளி சூப் சாப்பிடலாமா?” என்றான் பாலு. சென்னை கடற்கரையில் எனக்கு/எங்களுக்குப் பிடித்த விஷயம் இதுதான். விதவிதமாக சாப்பிடக் கிடைக்கும்.
“பீச் இல்லாவிட்டால், சென்னை எப்படி இருந்திருக்கும்?” என்று மாமாவைக் கேட்டேன். “கடற்கரையாக இருந்ததால்தான் இங்கே துறைமுகம் கட்ட வசதி என்று ஆங்கிலேயர்கள் வந்தார்கள். கடற்கரை இல்லாவிட்டால், சென்னை, திருச்சி மாதிரி இருந்திருக்கும்” என்றார் மாமா.
“கடற்கரை இல்லாவிட்டால், சென்னையில் பாதி பேருக்காவது பைத்தியம் பிடித்துவிடும்.” என்றது வாலு.
வாலுபீடியா 1: ஒரு மில்லிலிட்டர் கடல் நீரில், பத்து லட்சம் பாக்டீரியாக்களும் ஒரு கோடி வைரஸ்களும் இருக்கின்றனவாம். கடலில் நீந்தும்போது, வாய்க்குள் தண்ணீர் போனால் பயப்பட வேண்டாம். அவற்றில் பெரும்பாலான பாக்டீரியாக்களும் வைரஸ்களும் தீங்கில்லாதவை.
வாலுபீடியா 2: உலக கடல் தினம் ஜூன் 8

