ஆழ்கடல் நீச்சல் போட்டி: அசத்திய சிறப்புக் குழந்தைகள்
ஆழ்கடல் நீச்சல் போட்டி: அசத்திய சிறப்புக் குழந்தைகள்
PUBLISHED ON : டிச 24, 2018

மகாராஷ்டிர மாநிலம், சிந்து துர்க் மாவட்டத்தைச் சேர்ந்த சிவ்லா கடற்கரையில் மால்வன் ஆழ்கடல் நீச்சல் போட்டிகள் (Malvan Open Sea Swimming Competition) நடைபெற்றது. 9 ஆண்டாக நடந்து வரும் இப்போட்டியில், முதன் முறையாக 51 சிறப்புக் குழந்தைகள் கலந்து கொண்டுள்ளனர். ஆட்டிசம், டவுன் சிண்ட்ரோம், செரிபரல் பால்சி போன்ற பல வகை குறைபாடுகளைக் கொண்ட இக்குழந்தைகள் 1 கி.மீ. தூரம் ஆழ்கடலில் நீந்திச் சாதனை படைத்துள்ளனர்.
மால்வன் நீச்சல் போட்டி என்பது ஆண்டுக்கு 1,500 பேர் கலந்து கொள்ளும் பிரமாண்டமான நிகழ்வு. இது போன்ற போட்டிகளில் பங்கெடுக்கும் வாய்ப்பு, சிறப்புக் குழந்தைகளுக்குக் கிடைப்பது அரிது.
வெற்றி தோல்வி என்பதன் பொருளே புரியாத இக்குழந்தைகள் அனைவருமே வெற்றியாளர்கள் என்று அறிவிக்கப்பட்டு, அவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டிக்கான தூரத்தைக் கடந்த 51 குழந்தைகளும் வெற்றிப் பதக்கத்தைப் பெற்றபோது, அவர்களது பெற்றோரும் உற்சாகமடைந்தனர். ஆழ்கடல் நீச்சல் போட்டியில் இத்தனை சிறப்புக் குழந்தைகள் பங்கு பெறுவது இந்தியாவில் இதுவே முதல் முறையாகும்.
இப்போட்டியின் அமைப்பாளர்களில் ஒருவர் சாகர் ஷன்பெக் (Sagar Shanbhag). இவர் அமெரிக்காவில் பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டிப் பயிற்சியாளராகப் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர். “இந்தியாவில் மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கான விளையாட்டு வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளதாகவும், அதற்காகவே இப்போட்டியை ஏற்பாடு செய்ததாகவும், சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளுக்கான பயிற்சிகளின்போது, நானும் இன்னும் இரண்டு பயிற்சியாளர்களும் இந்த யோசனையை உருவாக்கினோம்.” என்றும் கூறுகிறார்.
மகாராஷ்டிரா அமெச்சூர் அக்வாடிக் சங்கம் இப்போட்டிக்கு அனுமதி அளித்தது. அதன் பின்னரே பெற்றோர்களுக்கு இவ்வாய்ப்பினைப் பற்றிப் புரியவைத்து சிறப்புக் குழந்தைகளை இதில் பங்குபெற வைத்துள்ளனர்.
“இப்போட்டி ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். இனி வரும் ஆண்டுகளில் இது போன்ற போட்டி நிகழ்வுகளும், அதில் பங்குபெறும் சிறப்புக் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்றே நினைக்கிறேன்.” என்றார் சாகர்.
