திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம் என்றோர் ஊர் இருக்கிறது. சிறந்த தவில் இசைக்கலைஞரான மீனாட்சிசுந்தரம் இவ்வூரைச் சேர்ந்தவர்தான். இங்கு தயாரிக்கப்படும் 'பால் திரட்டு' என்ற இனிப்பு வகை மிகவும் புகழ்பெற்றது.
ஒரு முறை, சிறந்த எழுத்தாளரும் பேச்சாளருமான கி.வா.ஜகந்நாதன் இவ்வூருக்கு வந்திருந்தார். தன்னை வரவேற்ற உள்ளூர்க்காரர்களிடம், ''உங்கள் ஊருக்கு இந்தப் பெயர் வந்த காரணம் என்ன?'' என்று விசாரித்தார் அவர்.
''உண்மையான காரணம் எங்களுக்குத் தெரியவில்லை'' என்றார்கள் உள்ளூர்க்காரர்கள். ''ஆனால், வெளியூர்க்காரர் ஒருவர், எங்கள் ஊரின் பெயரை மிகமோசமான வகையில் விளக்கிச் சொன்னார். அதைக் கேட்டு எங்களுக்குக் கோபம்தான் வந்தது.''
''அழகான ஊர்ப் பெயருக்கு மோசமான விளக்கமா?'' என்று வியந்தார் கி.வா.ஜ. ''அப்படி என்னதான் சொன்னார் அவர்?''
''மங்கலம் என்றால் நன்மை, நீடா மங்கலம் என்றால் நீடாத, நீடிக்காத மங்கலம் என்று சொல்லிவிட்டார் அந்த வெளியூர்க்காரர். எங்கள் ஊரில் எதைச் செய்தாலும் நன்மை இருக்காதாம், அப்படியே இருந்தாலும் அந்த நன்மை நீடிக்காதாம்!'
இந்த விளக்கத்தைக் கேட்ட கி.வா.ஜ. சிரித்தார். ''அதை அப்படிப் பிரிக்கக்கூடாது, வேறுவிதமாகப் பிரிக்கவேண்டும்'' என்றார். ''உங்கள் ஊரின் பெயருக்கு உண்மையான விளக்கம் என்ன என்பதை இன்று மாலை சொற்பொழிவில் விளக்குகிறேன்.''
இதைக்கேட்ட உள்ளூர் மக்கள் மகிழ்ந்தார்கள். தங்கள் ஊரின் பெயருக்கு இப்படியொரு மோசமான விளக்கமா என்கிற கவலையில் இருந்த அவர்கள், கி.வா.ஜ. அளிக்கப்போகும் விளக்கத்தை ஆவலுடன் எதிர்பார்த்தார்கள்.
அன்று மாலை கி.வா.ஜ. தன்னுடைய சொற்பொழிவைத் தொடங்கினார். 'நீடாமங்கலம்' என்ற பெயரை இவ்வாறு பிரித்து விளக்கினார்: ''நீடு ஆம் மங்கலம் நீடு என்றால் நீடித்தல், நீடு ஆம் மங்கலம் என்றால், நீடித்த நன்மை என்று பொருள். உங்கள் ஊரில் எதைச் செய்தாலும் நன்மை தொடர்ந்து நீடிக்கும். மங்கலம் நீண்டு வாழும் ஊர் இது!''
ஒரே சொல்தான். அதை இருவர் வெவ்வேறுவிதமாகப் பிரிக்கிறார்கள். 'நீடா(த) மங்கலம்' என்றால், எதிர்மறைப் பொருள் வருகிறது, 'நீடு ஆ(கு)ம் மங்கலம்' என்றால், நல்ல பொருள் வருகிறது. அந்த ஊர் மக்களுக்கு அது எப்பேர்ப்பட்ட மகிழ்ச்சியைத் தந்திருக்கும் என்று கற்பனை செய்துபாருங்கள்!
நம்முடைய ஊர்ப் பெயர்கள் அனைத்துமே நல்ல எண்ணத்துடன் உருவாக்கப்பட்டவைதாம். அங்கு வாழும் மக்கள் மகிழ்ச்சியாகவும் உடல்நலத்துடனும் வளத்துடனும் வாழவேண்டும் என்ற விருப்பத்துடன்தான் முன்னோர்கள் அந்தப் பெயர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஆகவே, எதிர்மறையான விளக்கங்களைப் பயன்படுத்தாமல், நல்லெண்ணங்களைப் பரப்புவோம்.
- என். சொக்கன்

