PUBLISHED ON : ஜூலை 18, 2016

'குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்' என்பது திருக்குறள்.
இதில், குழல் இசையைக் கேட்டிருக்கிறோம். யாழ் இசை? கேட்டிருக்க வாய்ப்பே இல்லை. ஏனென்றால், இந்த இசைக் கருவியே இப்போது புழக்கத்தில் இல்லை.
பழந்தமிழ் இலக்கியங்களில், யாழ் பற்றிய குறிப்புகள் உள்ளன. இது ஒரு நரம்பிசைக் கருவி. பல்வேறு கலாசாரங்களில் யாழ் இருந்துள்ளது. மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர் சுமேரிய நாகரிகத்தில் இந்தக் கருவி இருந்ததற்கான தொல்லியல் ஆதாரங்கள் இருக்கின்றன. ஆங்கிலத்தில் இதை 'Harp' என்கிறார்கள்.
அம்பு எய்யும்போது, வில்லில் இருந்து ஓர் இனிய ஒலி எழுவதை வேடர்கள் கவனித்தார்கள். 'வில்லை இசைக் கருவியாகப் பயன்படுத்த முடியுமா' என்று யோசித்தார்கள். அப்படி உருவானதுதான் யாழ். இந்த ஆதி யாழுக்கு 'வில் யாழ்' என்று பெயர். குறிஞ்சி நிலத்தைச் சேர்ந்த மக்கள் வில் யாழைக் கொண்டு 'குறிஞ்சிப் பண்' என்ற பாடலை வாசித்தார்கள்.
வில் யாழில் இருந்து காலப்போக்கில் பேரியாழ், சீறியாழ், சகோட யாழ், மகர யாழ், செங்கோட்டுயாழ் என்று பல வகைகள் தோன்றின. ஒன்று முதல் ஆயிரம் நரம்புகள்வரை கொண்ட விதவிதமான யாழ்கள் இருந்துள்ளன.
பேரியாழ் 21 நரம்புகளைக் கொண்டிருந்தது. இது கையில் எடுத்துப்போவது மாதிரி வடிவமைக்கப்பட்டது.
சீறியாழ், செங்கோட்டு யாழில் 7 தந்திகள் இருந்தன. சகோட யாழில் 14 தந்திகள். மகர யாழில் 17 அல்லது 19 தந்திகள் இருந்தன. பண் இசைப்பவர்களுக்குப் பாணர்கள் என்று பெயர். அவர்களில் சீறியாழ் வைத்திருந்தவர்கள் சிறுபாணர் என்றும், பேரியாழ் வைத்திருந்தவர்கள் பெரும்பாணர் என்றும் அழைக்கப்பட்டார்கள்.
யாழ் கி.பி. 9-ஆம் நூற்றாண்டுவரை வகைவகையாக வளர்ச்சி அடைந்தது. பிறகு வடிவத்தில் சில வேறுபாடுகளோடு வீணையாக உருமாற்றம் கண்டது.
